எந்த தொகுதியில் நின்றாலும் என்னுடைய வெற்றி உறுதி.. சாத்தூரில் விஜயபிரபாகரன் சொன்ன வார்த்தை!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன் என்று விஜயபிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட மக்கள் என்னை நம்புகிறார்கள் என்று கூறிய விஜயபிரபாகரன், தேமுதிகவுக்கு இது சிறந்த தேர்தலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 9ஆம் தேதியே கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசி வந்தார்.

ஆனால் திடீரென இன்னும் எந்தக் கட்சியும் கூட்டணியை அறிவிக்கவில்லை.. நாம் மட்டும் ஏன் முந்திரிக்கொட்டை போல் விரைவாக அறிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த், பிப்ரவரி 2வது வாரத்தில் கூட்டணி அறிவிப்பதாக கூறி இருக்கிறார். அதேபோல் பாஜக எப்படியாவது தேமுதிகவை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்து வருகிறது.
ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் தேமுதிக நிர்வாகி சுதீஷ் கலந்து கொண்டார். அப்போது சுதீஷ் - நயினார் நாகேந்திரன் இடையில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனால் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியை நோக்கி நகர்வதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது சாத்தூரில் விஜயபிரபாகரன் பேசுகையில், 2024ல் இல்லையென்றாலும் 2026ல் நிச்சயம் வெல்வோம். தேமுதிகவுக்கு இது சிறந்த தேர்தலாக இருக்கும். சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் என்று ஒவ்வொரு தொகுதிக்கு செல்லும் போதும், அங்கு போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.
விருதுநகரில் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெல்வேன் என்று தெரியும். மக்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள். ஆனால் நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய முடிவு அல்ல.. கட்சியின் பொதுச்செயலாளர், மாவட்ட நிர்வாகிகளுடன் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவாகும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமாக சரி செய்வோம். விஜயகாந்த் விட்டுச்சென்ற பணிகளை, நாங்கள் நிச்சயம் செய்வோம்.
மீண்டும் விருதுநகர் வருவேன். இங்கு வரும் போது எனக்கும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது என்று தெரிவித்தார். 2024 லோக்சபா தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்ட விஜயபிரபாகரன், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து அவர் விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications