20 பேரின் உயிரை பறித்த பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆலை உரிமையாளர் சந்தனமாரி அதிரடி கைது!
விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
குத்தகைதாரர் பொன்னுப்பாண்டி, குத்தகைதாரர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தனர்.
ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்தில் வைத்து சந்தனமாரியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 தொழிலாளர்கள் பரிதாப பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 13-ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் தாறுமாறாக வெடித்து சிதறியதால் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கர்ப்பிணி, குழந்தைகள் என பலர் உடல் சிதறி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி இரங்கல்
மேலும் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் சோக அலைகளை உருவாக்கிய இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும், பிரதமர், முதல்வர் சார்பில் நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டது.

7 பேர் மீது வழக்குப்பதிவு
சிறிய அறைகளில் பலரை பணியமர்த்தியதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆலை உரிமையாளர், குத்தகைதாரர்கள் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆலை உரிமையாளர் அதிரடி கைது
மேலும், குத்தகைதாரர் பொன்னுப்பாண்டி, குத்தகைதாரர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். தலைமறையாக இருந்த ஆலை உரிமையாளர் சந்தனமாரியை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆலை உரிமையாளர் சந்தனமாரியை இன்று காலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்தில் வைத்து சந்தனமாரியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications