இந்த பக்கம் வந்தா உங்களை பார்க்க வருவேன்..மாணவிகளின் அன்பால் நெகிழ்ந்து போன முதல்வர் ஸ்டாலின்! வீடியோ
விருதுநகர்: தமிழக முதல்வர் ஸ்டாலின், விருதுநகரில் இன்று குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்றபோது, அங்கு பயிலும் மாணவிகள் காட்டிய அன்பால் நெகிழ்ந்து போயுள்ளார். அப்பா என அழைத்த மாணவிகளிடம்.. "வரட்டுமா.. போய்ட்டு வரேன்.. இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் இங்க வர்றேன்" என உறுதியளித்துவிட்டுக் கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார். விருதுநகர் மாவட்ட எல்லையில் திமுகவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அந்தவகையில், விருதுநகர் சூலக்கரைமேடு பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார். காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, அவர்களிடம் காப்பகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களையும், இனிப்புகளையும் வழங்கினார்.
அப்போது மாணவி ஒருவர் பேசுகையில், "முதல்வரை பார்க்க வேண்டும் என்று எல்லோரும் ரொம்ப ஆசைப்படுவோம். அது வெறும் ஆசையாகவே போய்விடும் என நினைத்திருந்தோம். ஆனால் அவர் பக்கத்திலேயே இப்போது நிற்கிறேன் எனும்போது சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவரது குழந்தைகள் என நம்மை கருதி, பார்க்க வரும்போது ஸ்வீட் வாங்கி வந்திருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியவில்லை.
முதலமைச்சர் எங்களைப் பார்க்க வந்த நிலையில், "அப்பா" என்று சொன்னதுமே அந்த ஸ்மைல்.." என மிகுந்த மகிழ்ச்சியோடு உணர்ச்சி பொங்கப் பேசினார் அந்த மாணவி. மாணவி உற்சாகமாகப் பேசியதைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் மலர்ந்து சிரித்தார். மாணவி தோளைத் தொட்டு வாழ்த்தினார். மாணவியின் உற்சாக பேச்சால் அமைச்சர்கள், அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
காப்பகத்தில் பயிலும் மாணவிகளுக்கு பிரியாவிடை கொடுத்துச் செல்லும்போது நெகிழ்ந்து போயிருந்தார் முதல்வர் ஸ்டாலின். "வரட்டுமா.. போய்ட்டு வரேன்.. இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் இங்க வர்றேன்" என உறுதியளித்துவிட்டுக் கிளம்பினார். மேலும்,, காப்பகத்தில் மாணவிகளோடு அளவியாவிய காட்சியை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, " "அப்பா..." ♥️நிறைவான நாள்♥️" என பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக விருதுநகர், கன்னிசேரி புதூர், மேலச்சின்னையாபுரத்தில் உள்ள மதன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அந்த தொழிற்சாலை பெற்றுள்ள உரிமச் சான்றினை ஆய்வு செய்து, அங்கு பட்டாசுகள் தயாரிப்பதற்கான இரசாயனப் பொருட்கள் வைப்பறை, தயாரிக்கப்படும் இடங்கள், பட்டாசுகள் வைப்பறை, மைக்ரோ கார்டு திரி வைப்பறை போன்ற இடங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
“அப்பா…”
— M.K.Stalin (@mkstalin) November 9, 2024
♥️நிறைவான நாள்♥️ pic.twitter.com/XQN9xt387Q
சுமார் 80 பேர் பணிபுரியும் இத்தொழிற்சாலையில், 36 பெண்கள் பணியாற்றிவரும் நிலையில், அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா என்பதை முதலமைச்சர் கேட்டறிந்தார். பட்டாசு தொழிற்சாலை இதுவரை விபத்து ஏற்படாமல் மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட்டு வருவதை கேட்டறிந்த முதலமைச்சர் அவர்கள், அனைத்து தொழிற்சாலைகளிலும் பசுமையான சூழலைப் பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தவும் அறிவுறுத்தினார்.
பட்டாசு ஆலை உரிமையாளரிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பிற்கான முறையான காப்பீடு வசதியினை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், இத்தொழிற்சாலைக்கு வெளியே திரளாக கூடியிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications