அல்லிக்குளத்தில் "பூத்த" உறவு.. விருதுநகர் காட்டுக்குள் அடங்கிப்போன அருப்புக்கோட்டை நாகலட்சுமி
விருதுநகர்: காரியாப்பட்டி காட்டுக்குள் நடந்த சம்பவம் ஒன்று விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவில் உள்ளது அல்லிக்குளம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் நாகலட்சுமி.. இவருக்கு 25 வயதாகிறது.. இவரது கணவன் பெயர் பீமராஜ்..

சொந்த கிராமம்: அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பீமராஜ்.. இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து 4 வருடங்களாகின்றன. சம்பிரீத்ராஜ் என்று 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நாகலட்சுமி தன்னுடைய சொந்த கிராமமான அல்லிக்குளத்திலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்..
இந்நிலையில், நாகலட்சுமியின் உறவினர் ராஜபாண்டியன் என்பவரிடம் அடிக்கடி போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. மத்தியசேனை கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியனுக்கு 26 வயதாகிறது. எந்நேரமும் இவர்கள் 2 பேரும் போனில் பேசி கொண்டிருப்பதை பார்த்த பீமராஜ், மனைவியை கண்டித்திருக்கிறார். இதனால், ராஜபாண்டியனுடன் பேசுவதை திடீரென நாகலட்சுமி நிறுத்திகொண்டார்.
தகராறு: இது ராஜபாண்டியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. இது தொடர்பாக நாகலட்சுமியிடம் தகராறு செய்து வந்ததுடன், முன்புபோல் தன்னிடம் பழகுமாறும் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம், உறவினர் பிரியதர்ஷினியை (20) அழைத்து கொண்டு, காரியாபட்டியில் உள்ள ஒரு வங்கிக்கு தன்னுடைய 3 வயது குழந்தையுடன் வந்திருந்தார் நாகலட்சுமி.. அப்போது ராஜபாண்டியனும் அதே வங்கிக்கு பைக்கில் வந்தார். பேங்கில் வேலை முடிந்ததுமே, நாகலட்சுமி, குழந்தை சம்பிரீத் ராஜ், பிரியதர்ஷினி ஆகிய 3 பேரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றார் ராஜபாண்டியன்.
ராஜபாண்டியன்: எஸ்.கல்லுப்பட்டி விலக்கு அருகே சென்றபோது பிரியதர்ஷினியையும், குழந்தையையும் கீழே இறக்கிவிட்டு, நாகலட்சுமியை மட்டும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ராஜபாண்டியன் பைக்கில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து ராஜபாண்டியன் மட்டும் பைக்கில் திரும்பி வந்திருக்கிறார்.. அப்போது அவரிடம் நாகலட்சுமி எங்கே? என்று பிரியதர்ஷினி கேட்டதற்கு, நாகலட்சுமி காட்டுக்குள்ளே இறந்து கிடக்கிறார் என்று சொல்லிவிட்டு பைக்கில் வேகமாக பறந்துவிட்டார் ராஜபாண்டியன்.
ரத்த வெள்ளம்: இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி, காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, நாகலட்சுமி நிஜமாகவே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. அவரது கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி போலீசார், காட்டுக்கு விரைந்து சென்று, நாகலட்சுமியின் சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்து, விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீசார் சொல்லும்போது, "காட்டுக்குள் நாகலட்சுமியை, ராஜபாண்டியன் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது... பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடிவர நாகலட்சுமி முயற்சி செய்துள்ளார்.. அப்போதுதான், அவரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ராஜபாண்டியன் தப்பிச்சென்றுள்ளார்" என்கிறார்கள்.
காரணம் என்ன: எனினும், நாகலட்சுமி கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து முழு விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார், தலைமறைவாகியிருக்கும் ராஜபாண்டியனையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications