10 கி.மீ தூரத்துக்கு அதிர்வு.. கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிக பலி கொண்ட பட்டாசு ஆலை விபத்து இதுதான்!
விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக அதிக உயிர்பலி கொண்ட பட்டாசு ஆலை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள வனஜா பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் 20 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்தக் கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தீயணைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகிறார்.
கட்டனார்பட்டி வனஜா பட்டாசு ஆலையில் வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், 10 கி.மீ தூரத்துக்கு அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். குறுகிய அறையில் அதிக தொழிலாளர்கள் பணி செய்ததும், பாதுகாப்பற்ற முறையில் வீரியம் மிக்க வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டதும் தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக அதிக உயிர்பலி கொண்ட பட்டாசு ஆலை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 16 பட்டாசு விபத்துகள் நடந்தன. அவற்றில் 37 பேர் உயிரிழந்தனர். 2026 ஆம் ஆண்டில் இதுவரை நடந்த பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஐ தாண்டியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 27 பேர் பலியாகினர். அதற்குப் பிறகு மிகப்பெரிய எண்ணிக்கையில் உயிர் பலி கொண்ட சம்பவமாக இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளி என்ற இடத்தில் பட்டாசுக் கடையில் பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டின் பட்டாசு தயாரிப்பு மையமாக உள்ளது. சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. தொடர்ந்து இப்பகுதி பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இது அப்பகுதி மக்களிடையே உயிர் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications