அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்த இந்திய பெண்.. கிரீன் கார்டு நேர்காணலில் திடீரென கைது!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வந்த இந்திய பெண்மணி ஒருவர், கிரீன் கார்டு நேர்காணலின்போது கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 60 வயதான இந்த பெண்மணியின் கைது அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
பாபல்ஜீத் பப்ளி கவுர் எனும் இந்த பெண், கடந்த 1994ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் கலிபோர்னியாவில் லாங் பீச் பகுதியில், தனது கணவருடன் இணைந்து உணவகம் ஒன்றை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த பகுதியில் இப்பெண்மணி பிரபலமானவர்.

இவருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இரண்டு பிள்ளைகளுக்கு குடியுரிமை இருக்கிறது. இவரது கணவருக்கு கிரீன் கார்டு உள்ளது. கடந்த டிச.1ம் தேதி கிரீன் கார்டு விண்ணப்பத்திற்கான இறுதி சுற்றான பயோமெட்ரிக் சோதனைக்காக குடிவரவு அலுவலகத்திற்கு இப்பெண்மணி சென்றிருக்கிறார். அங்கு வைத்து சுங்க அதிகாரிகள் இப்பெண்மணியை கைது செய்திருக்கின்றனர். இந்த கைது குறித்து அவரது குடும்பத்தினருக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
இந்த கைதுக்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் உரிய விளக்கமளிக்கவில்லை. ஆனால் இதுபோன்று கைது செய்ப்படுவதற்கு பெரும்பாலும் 3 காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அமெரிக்காவில் நீண்ட காலமாக தங்கியிருப்பவர்களை நாடு கடத்த வேண்டும் என்று, அந்நாட்டு நீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரவிட்டிருக்கும். அப்போது தேடி பார்த்து சம்பந்தப்பட்ட நபர் கிடைக்கவில்லை என்கிற சூழலில், இதுபோன்று கைரேகை சோதனையின் போது அந்த நபர் கிடைத்தால் அவர்கள் கைது செய்யப்படலாம்.
அதேபோல, சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாமல் தங்கியிருப்பதும் கைதுக்கு முக்கிய காரணமாகும். கவுர் கடந்த 1994ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ளார். அவர் முறையான விசா இல்லாமல், அல்லது விசா காலாவதியான பின்னரும் அங்கேயே தங்கியிருந்திருப்பார். எனவே அதிகாரிகளால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. கிரீன் கார்டு அப்ளை செய்து அதற்கான பரிசீலனை நடைமுறையில் இருந்தாலும் இந்த கைது நடவடிக்கை தொடரும்.
மூன்றாவது காரணம், கிரீன் கார்டு விண்ணப்பங்களில் உள்ள முரண்பாடுகள். சிறிய முரண்கள் இருந்தாலும் கூட சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்படி முரண்கள் கொண்ட விண்ணப்பதாரர்களை நேரில் வரவழைத்து கைது செய்வார்கள். இது நிர்வாக பொறி என்றும் அழைக்கப்படுகிறது.
இப்படி மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்று இருக்கலாம். எது இருந்தாலும் 60 வயத மூதாட்டியை திடீரென கைது செய்வது, அதைப்பற்றி உறவினர்களுக்கு தகவல் கொடுக்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications