அமெரிக்காவில் 8,24,520 பேர் கொரோனாவால் மரணம் - ஜோ பிடன் உருக்கம்
அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பால் 824,520 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு அதிக அளவிலான சிறுவர்கள் தொற்றுக்கு ஆளாவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: கொரோனாவால் உயிரிழந்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்கள் விட்டுச் சென்ற குடும்பத்தினரையும், என்றென்றும் நினைத்துப் பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் மொத்தம் 8,24,520 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியும் அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனாவால்அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு மொத்தம் 5,14,35,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் மக்கள் தொகையில் அமெரிக்காவின் பங்கு 4 சதவிகிதம் மட்டுமே. ஆனால் கொரோனா உயிரிழப்புகளில் 15 சதவிகிதம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிபர் ஜோ பிடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொற்றுக்கு பலியானவர்கள் ஒவ்வொருவரையும் தான் நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்கள் விட்டுச் சென்ற குடும்பத்தினரையும், என்றென்றும் நினைத்துப் பார்ப்பதாகவும் பிடன் கூறியுள்ளார்.
கேப்பிடால் ஹில்லில் சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையில், ஒன்று கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்காவில் தற்போது வரை 60 சதவிகிதம் மக்களுக்கு, இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே அதிகம் உயிரிழப்பதாக, அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது ஓமிக்ரான் திரிபு வேகமாக பரவி வருவதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர வேண்டும் என, அதிபர் பிடன் வலியுறுத்தியுள்ளார்.
அதிக அளவிலான சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாவது அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 144,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,02,04,336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவைப் போலவே இங்கிலாந்திலும், கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கு ஒரே நாளில் 88,376 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கான பாதிப்பாகும். இதனை தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் "கோவிட் பாஸ்" பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொது கூட்டம், இரவு விடுதி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் 60,866 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 84,60,712 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 188 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மொத்தம் 121,171பேர் மரணமடைந்துள்ளனர். ஜெர்மனியில் ஒரே நாளில் 53,057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 479 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் ஒரே நாளில் 28,486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,133 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications