விமானத்தில் பறந்தால் உயிருக்கு ஆபத்து! மகன் தனுஷுக்காக ரிஸ்க் எடுக்கும் நடிகர் நெப்போலியன்!
வாஷிங்டன்: உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர நடிகர் நெப்போலியன் மிகப் பெரிய ரிஸ்க்கை எடுக்கிறார்.
நடிகர் நெப்போலியன் என சொன்னாலே அவர் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு நடனம் ஆடிய காட்சிகள்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு 1990களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.

இவரது இயற்பெயர் குமரேசன். திருச்சியை சேர்ந்த நெப்போலியனின் முதல் படம் புது நெல்லு புது நாத்து. இதைத் தொடர்ந்து எஜமான் படத்தில் இவரது நடிப்பு பொதுமக்களை கவர்ந்தது. அதன் மூலம் நெப்போலியன் மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் வில்லனாக நடிக்க உதவியது.
இதைத் தொடர்ந்து கிழக்கு சீமையிலே என்ற படத்தின் மூலம் நெப்போலியன் ஹீரோவாக மாறினார். அதுவும் மெகா ஹிட் படமாகும். அது போல் எட்டுப்பட்டி ராசா திரைப்படத்தில் நடித்த நெப்போலியனுக்கு தமிழக மாநில திரைப்பட விருது கிடைத்தது. பின்னர் இவருக்கு கலைமாமணி, எம்ஜிஆர் விருதுகள் கிடைத்துள்ளன.
நெப்போலியன் திரைத் துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் சாதித்தார். திமுகவில் இணைந்த அவர் 2001 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வில்லிவாக்கம் தொகுதியில் வென்றார். இதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் எஸ்.வி.சேகரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர் போக்கிரி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து 2009ஆம் ஆண்டு திமுக சார்பில் பெரம்பலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது மத்தியில் திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து சமூக நீதித் துறை அமைச்சராக நெப்போலியன், மு.க.அழகிரியின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்டார்.
இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு மு.க. அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து கட்சியில் நெப்போலியன் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் அதே ஆண்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்பு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அக்கட்சியின் மாநிலத் துறைத் தலைவராக இருந்தார். நடிப்பையும் அரசியலையும் ஒதுக்கியிருந்த நிலையில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியாமல் போனது.
மகனுக்கு சிகிச்சை அளிக்கவே அமெரிக்கா சென்ற நெப்போலியன் அங்கேயே செட்டிலாகிவிட்டார். அமெரிக்காவின் டென்னசி நாஷ்வில்லியில் தொழிலதிபராக வலம் வருகிறார். அங்கு ஐடி நிறுவனத்தையும் நெப்போலியன் நடத்தி வருகிறார். பல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வருகிறார். தன் மகனை போல் தசை சிதைவு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நெல்லை மாவட்டம் மயோபதியில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை இலவசமாக கட்டி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டாம். அவரை விமானத்தில் அழைத்து சென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். இதனால் தனது மகனை கடல் வழியாக இந்தியா அழைத்து செல்ல நெப்போலியன் முடிவு செய்துள்ளாராம்.
கடல் வழியாக அமெரிக்காவிலிருந்து இந்தியா வர 70 நாட்களாகுமாம். இதனால் அவரது உடல் இந்த பயணத்திற்கு ஒத்துழைக்கிறதா என்பதை பார்க்க, தற்போது 7 நாள் பயணமாக கப்பலில் இருந்தபடியே நெப்போலியன் தனது மகனுடன் அமெரிக்காவை சுற்றி பார்த்துள்ளார். அடுத்த ஆண்டு மகனை கப்பலில் அழைத்து வர போகிறாராம்.
அதாவது வர 3 மாதங்கள், போக மூன்று மாதங்கள் என கப்பலில் பயணிக்க முடிவெடுத்திருக்கிறாராம். மீதமுள்ள 4 மாதங்களுக்கு மகனுடனேயே இந்தியாவில் தங்குகிறார் நெப்போலியன். இந்த சம்பவம் பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications