ஏலியன்கள் இருப்பது உண்மைதான்.. ஓபனாக பேசிய ஒபாமா! ஏரியா 51 குறித்தும் விளக்கம்
வாஷிங்டன்: ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா என்பதற்கு இப்போது வரை நம்மிடம் ஆதரப்பூர்வமான பதில் இல்லை. இப்படி இருக்கையில், ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ஒரு போட்காஸ்ட் நேர்காணலில் யூடியூபர் பிரையன் டைலர் கோவெனுடன் நடந்த உரையாடலின்போது அவர், வேற்றுகிரகவாசிகள் உண்மையானவை என நம்புவதாகத் தெரிவித்துள்ளார். எனினும், வேற்றுகிரக உயிரினங்கள் எங்கு உள்ளன என்பது தனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார்.

வேற்றுகிரகவாசிகள், அமெரிக்காவின் ரகசிய தளமான ஏரியா 51-ல் வைக்கப்படவில்லை என ஒபாமா விளக்கினார். "நான் அவர்களைப் பார்த்ததில்லை. அவர்கள் 'ஏரியா 51'-ல் இல்லை. அங்கு எந்தவிதமான நிலத்தடி வசதியும் இல்லை. எனக்கு தெரியாமல் ஒரு பெரிய சதி நடந்து, அமெரிக்க அதிபரிடமிருந்தே மறைக்கப்பட்டிருந்தால் 'ஏரியா 51'-ல் ஏலியன்கள் இருப்பதாக நம்பலாம்" என கூறியிருக்கிறார்.
நெவாடா மாகாணத்தில் உள்ள க்ரூம் ஏரிப் பகுதியில் அமைந்துள்ள 'ஏரியா 51' என்பது, மிகவும் ரகசியமான அமெரிக்க விமானப்படைத் தளம் ஆகும். அரசு இங்கு வேற்றுகிரக தொழில்நுட்பத்தையோ அல்லது உயிரினங்களின் எச்சங்களையோ மறைத்து வைத்திருப்பதாக நீண்டகாலமாகவே சதி கோட்பாடுகள் நிலவி வருகின்றன.
UFO-க்கள் மற்றும் வேற்றுகிரகவாசிகள் பற்றி ஒபாமா பேசுவது இது முதல் முறையல்ல. 2021 ஆம் ஆண்டு 'தி லேட் லேட் ஷோ' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜேம்ஸ் கோர்டனுடன் நடந்த நேர்காணலில் அவர் கூறியதாவது: "வேற்றுகிரகவாசிகள் என்று வரும்போது, டிவி முன்பு நான் உங்களுக்குச் சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கின்றன" என்று குறிப்பிட்டார்.
அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் (UAPs) உண்மையானவை என ஒபாமா உறுதிப்படுத்தினார். அந்தப் பொருட்களின் தோற்றம் அல்லது வழக்கத்திற்கு மாறான பறக்கும் முறைகளை அரசாங்கத்தால் விளக்க முடியவில்லை என்றார். "ஆனால் உண்மை என்னவென்றால் - நான் இங்கு தீவிரமாகச் சொல்கிறேன் - வானத்தில் உள்ள பொருட்கள் பற்றிய பதிவுகளும் காட்சிகளும் உள்ளன. அவை என்னவென்று நமக்குத் துல்லியமாகத் தெரியாது" என்று அவர் விளக்கினார்.












Click it and Unblock the Notifications