அடி தூள்! இந்தியர்களுக்கு மெகா "ஜாக்பாட்.!" அமெரிக்கா எடுத்துள்ள மாஸ் முடிவு.. ஏன் ரொம்பவே முக்கியம்
வாஷிங்டன்: பிரதமர் மோடி இப்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்தியர்கள் விசா பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி முதல் அரசு முறை பயணமாக இப்போது அமெரிக்கா சென்றுள்ளார். கின்னஸ் சாதனை படைத்த யோகா நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். வாஷிங்டன் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இந்த பயணத்தில் இந்தியப் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் பைடனும் பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கின்றனர். விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
விசா: இதற்கிடையே அமெரிக்கர்கள் இந்தியாவில் வாழவும் வேலை செய்யவும் எளிதாக்கும் வகையில் அமெரிக்க அரசு முக்கிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. பிரதமர் மோடி இப்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி, திறமையான தொழிலாளர்கள் அமெரிக்காவில் நுழைவதையும் தங்குவதையும் எளிதாக்கும் நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கவுள்ளது.
H-1B விசாக்கள் வைத்திருக்கும் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டு ஊழியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல், அமெரிக்காவிலேயே அந்த விசாக்களை புதுப்பிக்க முடியும் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இது குறித்து விவரம் அறிந்தோர் தெரிவிக்கின்றனர். முதலில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தும் இந்தத் திட்டத்தை விரைவில் அவர்கள் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனராம்.
H-1B விசாக்களை அதிகபட்சமாக இந்தியர்கள் தான் பயன்படுத்துகின்றனர். 2022 நிதியாண்டில் வழங்கப்பட்ட விசாக்களில் சுமார் 442,000 அதாவது 73% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இப்போது அமெரிக்கா எடுத்த முடிவால் இந்தியர்களே அதிகப்படியாக பயனடைவார்கள்.
புது முயற்சி: இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "எங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் திறமையான ஊழியர்கள் தேவை.. திறமையான ஊழியர்கள் நாட்டிற்கு வருவதையும் தங்குவதையும் எளிதாக்கும் நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம். இதற்காக வெளியுறவுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார். இருப்பினும், இந்தத் திட்டம் எப்போது தொடங்கப்படும் எந்த வகையான விசாக்கள் இதில் இடம்பெறும் என்பது போன்ற தகவல்கள் இதில் இடம்பெறவில்லை.
தொடக்கத்தில் சோதனை முயற்சியாக இது சிறிய அளவில் தொடங்கப்படும் என்றும் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் என்ன மாதிரியான நடைமுறைகள் இறுதி செய்யப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லையாம். அதேபோல வெள்ளை மாளிகையும் இது குறித்து எந்தவொரு கருத்தும் கூறவில்லை.
அதென்ன ஹெச் 1 பி விசா: ஒவ்வொரு ஆண்டும், திறமையான வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் வகையில் 65,000 H-1B விசாக்களையும், குறிப்பிட்ட மேற்படிப்புகளைப் படித்த தொழிலாளர்களுக்குக் கூடுதலாக 20,000 விசாக்களையும் அமெரிக்க அரசு வழங்குகிறது. இந்த விசாக்கள் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும். மேலும் அதை மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கலாம்.
சமீப ஆண்டுகளாக H-1B விசாக்களை இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அமேசான், ஆல்பபெட், பேஸ்புக் நிறுவனங்களே அதிகமாகப் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலேயே விசாக்களை புதுப்பிக்கும் நடைமுறை என்பது வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும். அதேபோல அமெரிக்காவிலேயே ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற பயன்படும் எல்-1 விசாக்களும் இது பயன்படும் என்றே தெரிகிறது.
அதேபோல இந்தியாவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகங்களில் நிலுவையில் இருக்கும் விசா விண்ணப்பங்களை க்ளியர் செய்யவும் தேவையான நடவடிக்கைகள் தனியாக எடுக்கப்பட்டு வருகிறதாம். இது குறித்தும் சில வாரங்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்கா செல்ல விசா கிடைக்க நீண்ட தாமதமாகும் நிலையில், அந்நாட்டு அரசு இதில் தீர்வு காணத் தீவிரமாக முயன்று வருகிறது.












Click it and Unblock the Notifications