டிரம்பின் அட்ராசிட்டி.. நாடு கடத்தப்படும் மாணவர்கள்.. அதிபர் நிர்வாகம் இந்திய மாணவர் மீது வழக்கு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றப் பிறகு சட்டப்பூர்வமாக அங்கு குடியேறிய வெளிநாட்டினர் கூட நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளது. இதனால், இந்தியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மிச்சிகன் பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர், மேலும் 3 பேரும் தங்களது மாணவர் குடியேற்ற நிலை சட்ட விரோதமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறி டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டு மக்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகிறார். இந்த உத்தரவுகளால் அமெரிக்காவுக்கு சட்டப்பூர்வமாக குடியேறிவர்கள் கூட கடும் பிரச்சனைகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் பேர் உள்ளனர். வேலை, உயர்கல்வி என அங்கு இந்தியர்கள் அதிகம் உள்ள சூழலால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிரிஷ் லால் இசெர்தாசனி என்ற இந்தியாவைச் சேர்ந்த மாணவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பயின்று வருகிறார். இவர் சட்டப்பூர்வமாக எஃப் 1 விசா பெற்றே அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். கடைசி செமஸ்டர் பயின்று வரும் நிலையில், மே 10 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், திடீரென கிரஷை டிரம்ப் நிர்வாகம் நாடு கடத்த முயன்றுள்ளது. அமெரிக்க போலிஸார் கிரிஷை கடந்த நவம்பர் மாதம் கைது செய்துள்ளனர். இதனை கிரிஷ்ஷும் ஒப்புக் கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தினத்தன்று ஒரு பாரில் இருந்து இரவு தாமதமாக கிரிஷ் வந்துள்ளார். அப்போது மற்றொரு குழுவுடன் வாய் தகராறு ஏற்பட்டதில் கிரிஷ், அவரது நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனை விசாரித்த மாவட்ட வழக்கறிஞர் வழக்கை டிஸ்மிஸ் செய்துள்ளார். இதனால், கிரிஷ் நீதிமன்றத்தில் விசாரணைக்கும் ஆஜராகவில்லை, தண்டனையும் பெறவில்லை. இந்த சம்பவம் அப்போதே முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 4 ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் மாணவர் சேவைகள் மூலம் வந்த மெயிலில், அவரது SEVIS ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் மீதுள்ள குற்றவியல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது. தனது விசா ரத்து குறித்து அமெரிக்க குடிவரவுத் துறை, பல்கலைக்கழகமோ, வெளியுறவுத் துறையோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் கிரிஷ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனை விசாரித்த நீதிபதி நாடு கடத்தல் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
இந்நிலையில், மிச்சிகன் பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர் மற்றும் மேலும் 3 பேரும் தங்களது மாணவர் குடியேற்ற நிலை சட்ட விரோதமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறி டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்தியாவைச் சேர்ந்த சின்மய் தியோர், சீனாவைச் சேர்ந்த சியாங்யுன் பு, கியுயி யாங், நேபாளத்தைச் சேர்ந்த யோகேஷ் ஜோஷி ஆகிய மாணவர்கள் உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
அதில், மாணவர் மற்றும் எக்சேஞ்ச் விசிட்டர் சிஸ்டம் (SEVIS) அமைப்பில் தங்களது குடியேற்ற நிலையை, எந்தவொரு முன்னறிவிப்பும், விளக்கமும் இல்லாமல் சட்ட விரோதமாக நீக்கியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கள் மீது எந்தவொரு குற்றமும் சுமத்தப்படவில்லை. குடியேற்றச் சட்டத்தையும் நாங்கள் மீறவில்லை. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் போராட்டங்கள், எந்தவொரு அரசியல் பிரச்சனைகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை. அதேபோல, அமெரிக்காவில் எந்தவொரு குற்றச்சாட்டும் எங்கள் மீதும் இல்லை. எனவே, தங்கள் படிப்பை முடிக்கவும், தடுப்புக் காவல் மற்றும் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்ளாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications