பில் கேட்ஸுக்கு 3 பெண்களுடன் தொடர்பு.. பிளாக்மெயில் முயற்சி வேற.. அமெரிக்காவை அதிர வைத்த வாக்குமூலம்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையின்போது, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனக்கு மூன்று பெண்களுடன் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அந்த விவகாரங்களை வைத்து மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை மிரட்ட முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த தகவல்கள் பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது.
மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் கூட்டாளிகள் மற்றும் அவரது நெட்வோர்க் குறித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வை குழு நடத்தி வரும் விசாரணையில் தான் பில் கேட்ஸ் இந்த அதிர்ச்சி தகவல்களைக் கூறியிருக்கிறார். 2019ஆம் ஆண்டு சிறையில் மரணமடைந்த எப்ஸ்டீனுக்கும், பில் கேட்ஸுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து சமீபத்தில் கூடுதல் ஆவணங்கள் வெளியாகி இருந்த நிலையில், பில் கேட்ஸிடம் விசாரணை நடத்தப்பட்டது.

3 பெண்கள்
கடந்த ஜூன் 10ம் தேதி இந்த குழுவின் முன் ஆஜரான பில் கேட்ஸ் சில அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ரஷ்யாவைச் சேர்ந்த பிரிட்ஜ் விளையாட்டு வீரர் மிலா ஆண்டனோவா மற்றும் அணுசக்தி ஆய்வாளர் கரிமா நிக்மதுலினா ஆகிய இரு பெண்களுடன் தனக்குத் தொடர்பு இருந்ததாகவும் அதை எப்படியோ எப்ஸ்டீன் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார். பின்னர், மருத்துவத் தொழிலதிபரான ஆலிஸ் ஜேக்கப்ஸ் நெசெல்ரோட் என்ற பெண் உடனும் தனக்கு தொடர்பு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
பில் கேட்ஸ் மேலும், "இதற்கும் எப்ஸ்டீன் குற்றங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.. ஆனால் இது எனது குடும்பத்தினருக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது.. எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய தகவல்களையும், அதோடு பல பொய்களையும் சேர்த்து எப்ஸ்டீன் எனக்கு பிரஷர் போட்டார். அவருடன் நான் இணைய வேண்டும் என்பதற்காகவே அவர் இதுபோல செய்தார்.. ஆனால், நான் அதில் உடன்படவில்லை.
குற்றத்தில் பங்கு இல்லை
எப்ஸ்டீனின் குற்றங்களில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை.. எப்ஸ்டீன் உடன் நான் தொடர்பு வைத்திருந்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிக பெரிய தவறு. எனது தொண்டு நிறுவனத்தின் பணிகள் குறித்து ஆலோசிக்க மட்டுமே எப்ஸ்டீனைச் சந்தித்தேன்" என்று விளக்கம் கொடுத்துள்ளார். அறக்கட்டளைப் பணிகளுக்கு மற்ற பெரும் பணக்காரர்களைத் தொடர்பு கொள்ள உதவுவேன் என்று எப்ஸ்டீன் மீண்டும் மீண்டும் உறுதியளித்ததாகவும், ஆனால் அதை எப்ஸடீனால் செய்ய முடியவில்லை என்றும் பில் கேட்ஸ் தெரிவித்தார்.
விசாரணையின் போது, எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முயன்றிருக்கலாம் என்று பில் கேட்ஸ் சுட்டிக்காட்டினார். பில் கேட்ஸின் திருமணத்தைத் தாண்டிய உறவு குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் அதை வைத்து எப்ஸ்டீன் தன்னை மிரட்டத் திட்டமிட்டிருந்தார் என்றும் இருப்பினும் அந்த மிரட்டல் பலன் அளிக்கவில்லை என்றும் பில் கேட்ஸ் தெரிவித்தார்.
பிளாக் மெயில்
அவர் மேலும், "என்னை ஒருபோதும் நேரடியாக மிரட்டவில்லை. ஆனால் இந்த மெயில்களை பார்க்கும்போது, அவர் என்னை மிரட்டத் திட்டமிட்டதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்த்துகிறது. சில உண்மைகளையும் பல பொய்களையும் சேர்த்து வைத்து என்னை மிரட்ட திட்டமிட்டிருந்தது போலவே தெரிகிறது" என்று பில் கேட்ஸ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பில் கேட்ஸிற்கு பாலியல் நோய்கள் இருந்ததாக எப்ஸ்டீன் ஆவணங்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பில் கேட்ஸ், "எனக்கு ஒருபோதும் அத்தகைய நோய் இருந்ததில்லை. இது குறித்து நான் கவலைப்பட்டதும் இல்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
எப்ஸ்டீன்
நான்கு ஆண்டுக்கால இடைவெளியில் எப்ஸ்டீனை 12 முதல் 14 முறை நேரில் சந்தித்ததாகவும், இரண்டு முறை வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பேசியதாகவும் கேட்ஸ் கூறினார். 2008இல் எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் கூட பில் கேட்ஸ் அவரைத் தொடர்ந்து சந்தித்துள்ளார். இதுவே பெரிய சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரி எப்ஸ்டீன் உலகில் பல செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் உலகப் பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆனால், தனது அதிகாரத்தையும் பணபலத்தையும் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான மைனர் சிறுமிகளைத் தனது தீவிற்கு கடத்திச் சென்று, அவர்களை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பெரும் பணக்காரர்களுக்கு அந்த சிறுமிகளை வைத்து பார்ட்டியும் நடத்தியிருக்கிறார் என்பதே அவர் மீதான நிரூபிக்கப்பட்ட குற்றமாகும்.












Click it and Unblock the Notifications