அலறிய அமெரிக்கா.. டிரம்ப் உடன் நெருக்கமாக உள்ள எல்லாருக்கும் வெடிகுண்டு மிரட்டல்! களத்தில் எஃப்.பி.ஐ
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப், அடுத்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்கும் நிலையில், தனது அமைச்சரவையில் உள்ளவர்களைத் தேர்வு செய்து வருகிறார். இதற்கிடையே டிரம்ப் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளவர்கள் மற்றும் அவரால் டாப் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றுள்ளார். அதேநேரம் அவர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தான் அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.

டிரம்ப்: இதையடுத்து டிரம்ப் தனது நிர்வாகத்தில் இடம்பெற உள்ளவர்களை தேர்வு செய்து வருகிறார். அதேபோல முக்கிய பதவிகளுக்கும் தனது சகாக்களை நியமித்து வருகிறார். இதற்கிடையே ஒரே நாளில் சொல்லி வைத்தது போல டிரம்ப் தனது நிர்வாகத்திற்குத் தேர்வு செய்து வைத்துள்ள பலருக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக எஃப்.பி.ஐ. தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதனை டிரம்ப் தரப்பின் செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். டிரம்ப் தனது அமைச்சரவைக்குத் தேர்வு செய்தவர்கள் மற்றும் பல டாப் பதவிகளுக்குத் தேர்வு செய்தோருக்குக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செய்தித்தொடர்பாளர்: இது தொடர்பாக டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அதிபர் டிரம்பின் அமைச்சரவையில் உள்ளவர்கள், பல பதவிகளுக்கு நியமிக்கப்பட்டோருக்கு நேற்றிரவு மற்றும் இன்று காலை கொலை மிரட்டல் வந்துள்ளது. அவர்களை அச்சுறுத்தும் வகையில் மிக மோசமான மெசேஜ்கள் வந்துள்ளன" என்றார்.
அதேநேரம் டிரம்ப் அமைச்சரவையில் உள்ள யாருக்கெல்லாம் இந்த அச்சுறுத்தல் மெசேஜ் வந்துள்ளது என்பது குறித்த விவரங்களை லீவிட் பகிரவில்லை. வெறுமன அமைச்சரவையில் உள்ள பலருக்கும் கொலை மிரட்டல்களும் வெடி குண்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளதாக மட்டுமே லீவிட் தெரிவித்தார்.
எப்.பி.ஐ: அடுத்து அமையவுள்ள அரசில் இடம்பெறும் பலருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. அமைப்பும் விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பல வெடிகுண்டு மற்றும் கொலை மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளன. இது குறித்து எங்களுக்கு ஏற்கனவே தெரியும். எல்லா அச்சுறுத்தல்களையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறோம்" என்றார்.
அமெரிக்காவின் ஐ.நா தூதராக டிரம்ப் தேர்வு செய்துள்ள எலிஸ் ஸ்டெபானிக் தனது நியூயார்க்கில் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதேபோல டிரம்ப் அமைச்சரவையில் உள்ள பலருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இப்படி டிரம்ப் தேர்வு செய்துள்ள பலருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவரை கொலை செய்ய இரண்டு முறை முயற்சிகள் நடந்தது. குறிப்பாக பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிக் குண்டு அவரது காதை உரசிச் சென்றது. அதில் நூலிழையில் அவர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. அதேபோல மற்றொரு முறை டிரம்பை கொலை செய்யும் நோக்கில் அவரது கோல்ஃப் மைதானத்தில் பயங்கர ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத நபர் உள்ளே வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications