"தீயாய் பரவும் குரங்கு அம்மை".. அவசர நிலையை அறிவித்தது கலிபோர்னியா.. தடுப்பூசி போடும் பணி தீவிரம்
வாஷிங்டன்: குரங்கு அம்மை பரவலால், அமெரிக்காவில் ஏற்கனவே 2 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 3-வதாக கலிபோர்னியா மாகானத்திலும் சுகாதார அவசரநிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு உலகளாவிய பெருந்தொற்று நோய் போல குரங்கு அம்மை பரவி வருகிறது.
குரங்கு அம்மை நோயும் வைரசால் பரவும் நோய் என்பதால் கொரோனா போல் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்து வருகிறது.

அமெரிக்காவில் குரங்கு அம்மை
இந்த சூல்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச சுகாதார அவசர நிலையை கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. உலக நாடுகள் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. குரங்கு அம்மை நோய் அமெரிக்காவில் அதிக அளவில் பரவியிருப்பதால் அந்நாட்டின் மாகாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவசர நிலையை அறிவித்து வருகின்றன.

கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்
ஏற்கனவே, நியூயார்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்த நிலையில், தற்போது கலிபோர்னியா மாகாணமும் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கலிபோர்னியா மாகாண கவர்னர் கவின் நியூசோம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''குரங்கு அம்மை நாடு முழுவதும் பரவத்தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
அமெரிக்காவில் 5,800 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் ஏறத்தாழ 800 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் காரணமாக கலிபோர்னியா முழுவதும் உள்ள மக்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டுவருவதாக கலிபோர்னியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

பரவல் வேகத்தை குறைக்க நடவடிக்கை
மேலும், பரிசோதனைகளை அதிகரித்து நோய் பரவலின் வேகத்தை குறைப்பதற்காக அரசு அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதுவரை 61 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாகவும் 6 முதல் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கேட்டிருப்பதாகவும் கலிபோர்னியா அரசு தெரிவித்துள்ளது. மே 21 ஆம் தேதி முதன் முதலாக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. மாகாணம் முழுவதும் 27 இடங்களில் பரவிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சில மகாணங்கள் சுகாதார அவசர நிலையை அறிவித்தாலும் இதுவரை நாடு முழுவதுமான ஒரு அவசர நிலையை ஜோ பைடன் நிர்வாகம் அறிவிக்கவில்லை. அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications