சிக்கல்.. ஜோ பிடன் பற்றி உக்ரைன் அதிபரிடம் விசாரிக்க கோரிய ட்ரம்ப்! ஆதாரத்தை வெளியிட்ட வெள்ளை மாளிகை
Recommended Video
வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு எதிராக விசாரணை நடத்தும்படி உக்ரைன் நாட்டு அதிபரிடம் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டதாக வெளியான தகவல் உண்மைதான் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு பிறநாட்டுக்கு அழுத்தம் கொடுத்து அமெரிக்க தலைவர் தொடர்பாக விசாரிக்க கூறியது தவறான செயல் என்று கூறி, ஜனநாயக கட்சி சார்பில் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்க்கு எதிராக தகுதிநீக்க தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி உத்தரவின்பேரில் 6 கமிட்டிகள் அமைக்கப்பட்டு அதிபரின் நடவடிக்கை தொடர்பாக விசாரணை துவங்கியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கியிடம் கடந்த ஜூலை 25 ஆம் தேதியன்று ட்ரம்ப், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்,
டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்க அதிரடி தீர்மானம்.. பிரதிநிதிகள் சபையில் விசாரணை ஆரம்பம்.. பரபரப்பு
"ஜோ பிடனின் மகனைப் பற்றி நிறைய சர்ச்சைகள் உள்ளன, புரிஸ்மா நிறுவனத்தின் மீதான விசாரணையை, பிடன் நிறுத்திவிட்டார், அதன் பின்னணி பற்றி நிறைய பேர் அறிய விரும்புகிறார்கள். எனவே விசாரணை நடத்துங்கள்" என்று டிரம்ப் அப்போது கூறியுள்ளார்.
இரு நாட்டு அதிபர்களும், என்ன பேசினார்கள் அறிக்கையை வெள்ளை மாளிகை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. எனவே இந்த உரையாடல் நடந்தது உண்மைதான் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தை விட்டு வெளியே நிருபர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், இந்த கோரிக்கை நட்பு ரீதியாக முன்வைக்கப்பட்டது. உக்ரைன் அதிபருக்கு எந்த விதமான அழுத்தமும் தரப்படவில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், உக்ரைனுக்கு வழங்கப்பட்ட சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை அமெரிக்க அரசு திடீரென நிறுத்தி வைத்தது. பிறகு சில காலம் கழித்து அந்த நிதியை ஒதுக்கீடு செய்தது. இதையும் அதிபரிடம் ட்ரம்ப் பேசிய இந்த கருத்தையும் வைத்து, முடிச்சு போடுகின்றனர் ஜனநாயக கட்சியினர். எனவே இந்த சம்பவம் அமெரிக்க அரசியலில் புயலை கிளப்ப தொடங்கியுள்ளது.
ஜோ பிடன், மகன், ஹண்டர் 2014, ஏப்ரலில், உக்ரைன் நாட்டின் புரிஸ்மா ஹோல்டிங்ஸின் கட்டண வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனம் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட உக்ரேனிய தீபகற்பமான கிரிமியாவில் இயற்கை எரிவாயு பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
புரிஸ்மா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு எதிரான முறைகேடு புகாரை விசாரித்த விசாரணை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதில் ஜோ பிடன் கைவரிசை இருப்பதாக குடியரசு கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் தனது தந்தையை தனது தொழில் விஷயங்களுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஹண்டர் மறுத்துவருகிறார்.