சீனா மிகவும் சக்தி வாய்ந்த நாடு.. தைவான் விஷயத்தில் பேக் அடித்த அமெரிக்கா! காரணம் இதுதான்!
வாஷிங்டன்: இரண்டு நாட்கள் சீன பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் நாடு திரும்பியிருக்கிறார். இந்த பயணம் குறித்தும், சீன அதிபருடனான சந்திப்பு குறித்தும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சீனா மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடு. எனவே தைவான் தனது தனிநாடு கோரிக்கையை கைவிட வேண்டும்" என கூறியிருக்கிறார். இது தைவானுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அமெரிக்கா திரும்பிய டிரம்ப், ஃபாக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். டிரம்பின் கருத்து, தைவான் விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

தைவானை கைவிட்ட அமெரிக்கா
பேட்டியில் டிரம்ப் கூறியதாவது, "யாரும் தனியாக சுதந்திரம் பெறுவதை நான் விரும்பவில்லை. சீனா மிகப்பெரிய வலிமையான நாடு. ஆனால் அப்படியே தைவானை பாருங்கள். அது ஒரு சிறிய தீவு. சீனாவிலிருந்து வெறும் 94 கி.மீ தூரத்தில்தான் இருக்கிறது. ஆனால் நாம் 15,300 கி.மீ தூரத்தில் இருக்கிறோம். இவ்வளவு தூரம் பயணம் செய்து ஒரு போரை நடத்துவது என்பது கடினமான விஷயம்" என்று கூறியிருக்கிறார்.
ஆயுத விநியோகம்
மேலும், தைவான் தனது தற்காப்பிற்காக அமெரிக்காவிடம் கோரியிருந்த பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சேபனைகளைக் கேட்ட பிறகு, இந்த ஆயுதங்களை வழங்குவதா வேண்டாமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், இதனைச் சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஒரு பயனுள்ள கருவியாக பயன்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
திருட்டில் ஈடுபட்ட தைவான்
அதேபோல, தைவானின் செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் கடந்த கால ஆட்சியாளர்கள்தான் காரணம் என்றும் விமர்சித்திருக்கிறார். அதாவது, "வரலாற்றைப் பார்த்தால், தைவான் வளர்ந்ததற்கு நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாத அதிபர்கள்தான் காரணம். அவர்கள் நம் சிப் தொழிலைத் திருடிவிட்டனர்" என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
பேச்சுவார்தையில் வெற்றி
ஈரான் விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், அணு ஆயுதம் தாங்கிய ஈரான் உலகிற்கு ஆபத்தானது என்பதை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக்கொண்டதாகவும், தற்போதைய மத்திய கிழக்கு மோதல்களைத் தீர்க்க சீனா உதவ ஆர்வமாக உள்ளதாகவும் டிரம்ப் கூறினார். இந்த மாநாட்டின் மூலம் சீனா, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 200 பெரிய விமானங்களை வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதை சுட்டிக்காட்டிய டிரம்ப், பேச்சுவார்த்தை எதிர்பார்த்த அளவுக்கு இருந்ததாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications