வேகமாக வந்த அமெரிக்க விமானம்.. வழிமறித்து நின்ற சீன போர் விமானம் - பரபர சம்பவம் - என்னாச்சு?
பார்சல் தீவுக்கு மேலே சுமார் 21,000 அடி உயரத்தில் அமெரிக்க விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சீனக் கொடி பொறிக்கப்பட்ட ஒரு போர் விமானம், ஏவுகணை சகிதமாக அமெரிக்க விமானத்தை வேகமாக நெருங்கியது.
வாஷிங்டன்: தென்சீனக் கடற்பகுதிக்கு மேலே பறந்த அமெரிக்க கடற்படை விமானத்தை ஆயுதங்களுடன் வந்த சீன போர் விமானம் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவை பலூன் மூலம் உளவு பார்த்ததாக இரு நாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கும் சூழலில், இந்த விவகாரம் புதிய புயலை கிளப்பியுள்ளது.
தென்சீனக் கடற்பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடி வரும் சீனா, தற்போது இந்த விவகாரத்தில் அமெரிக்காவை எச்சரிக்கும் தொனியில் இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடுங்கோபத்தில் அமெரிக்கா
தனது நாட்டை ராட்சத பலூன் மூலமாக சீனா உளவு பார்த்தது, அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள முக்கிய ராணுவத் தளவாடங்களை பலூன் மூலமாக சீனா உளவு பார்த்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதன் தொடர்ச்சியாக, அந்த உளவு பலூனை போர் விமானம் மூலமாக அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மேலும், அண்மையில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டின் போது, சீன வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளின்கென் அவரை கடுமையாக எச்சரித்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடந்தால் அமெரிக்காவின் எதிர்வினை கடுமையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் சீண்டிய சீனா
சர்வதேச கடல் சட்டங்களை மதிக்காமல், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தையும், தென்சீனக் கடல் பகுதியையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை சொந்தம் கொண்டாடும் சீனாவின் செயல்களை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது. மேலும், சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சாமல் அங்கு பல்வேறு வர்த்தக நடவடி்ககைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஆனால், தென்சீனக் கடற்பகுதியில் சீனாவை எதிர்ககும் துணிச்சல் பிலிப்பைனஸ், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளுக்கு இல்லாததால், தான் வைத்ததுதான் சட்டம் என்ற தொனியில் சீனா செயல்பட்டு வருகிறது. எனினும், இந்த பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறலை அமெரிக்கா எதிர்த்து வருகிறது.

வழிமறித்த சீன போர் விமானம்
இதுபோன்ற சூழலில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'பி-8 போஸிடான்' என்ற விமானம் வழக்கமான ரோந்துப் பணியில் கடந்த வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தது. அப்போது பார்சல் தீவுக்கு மேலே சுமார் 21,000 அடி உயரத்தில் அமெரிக்க விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சீனக் கொடி பொறிக்கப்பட்ட ஒரு போர் விமானம், ஏவுகணை சகிதமாக அமெரிக்க விமானத்தை வேகமாக நெருங்கியது. இதை பார்த்த அமெரிக்க விமானி அதிர்ச்சி அடைந்தார்.

சீன ராணுவம் எச்சரிக்கை
அப்போது, அமெரிக்க விமானிக்கு சீன ராணுவத்திடம் இருந்து ஒரு செய்தி சொல்லப்பட்டது. அதில், சீன வான்பரப்பு 12 நாட்டிக்கல் மைல் தொலைவில்தான் உள்ளது. உள்ளே வந்துவிடாதீர்கள். மீறி நுழைந்தால் அதற்கான முழு பொறுப்பும் நீங்கள்தான்" எனக் கூறப்பட்டது. பின்னர், சுமார் 15 நிமிடங்களாக அமெரிக்க விமானத்துக்கு அருகிலேயே சீன போர் விமானம் பறந்து சென்றது. பின்னர், தனது வழித்தடத்தை சீன போர் விமானம் மாற்றிக் கொண்டது. அமெரிக்காவையே எச்சரிக்கும் தொனியில் சீனா செய்த இந்த செயல், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications