இரண்டாவது தங்கமாக உருவாகிறதா வெள்ளி! இந்த நேரத்துல வாங்கலாமா? இதை தெரிஞ்சுக்கோங்க
வாஷிங்டன்: தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சத்தை தொட்டிருக்கிறது. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்க முடியாது. வெள்ளியும் அதே வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது. எனவே வெள்ளியை வாங்கினால் லாபம் ஈட்டலாம் என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஆனால், இதில் சிக்கல் இருப்பதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு உலகத்தையே புரட்டிப் போட்ட பொருளாதார நெருக்கடியை முன்கூட்டியே கணித்தவர்தான் பொருளாதார நிபுணர் பீட்டர் ஷிஃப். இவரை சர்வதேச பொருளாதார நிபுணர்கள் டாக்டர் டூம் என்று அழைக்கிறார்கள்.

தங்கம் வாங்கலாமா? வெள்ளி வாங்கலாமா? என்பது குறித்து டாக்டர் டூம் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, "தங்கம் விலை உயர்ந்திருப்பது உண்மைதான். ஆனால், இப்போது தங்கம் மிக குறைந்த விலையில்தான் விற்கப்படுகிறது. எதிர்காலத்தில் தங்கம் விலை குறையவே வாய்ப்பு கிடையாது. எனவே முதலீட்டாளர்கள் பயப்படாமல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இந்த ஆண்டு மட்டும் தங்கம் 75% அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது.
வெள்ளியை பொறுத்தவரை கொஞ்சம் பொறுத்திருங்கள். வெள்ளி விலையில் ஏற்ற இறக்கம் இருக்கிறது. இப்போதைக்கு வெள்ளி வாங்குவதை தவிர்க்க வேண்டும். வெள்ளியின் விலை திடீரென உச்சத்தை தொட்டு, ஒரு அவுன்ஸ் வெள்ளி ரூ.7,560 என உயர்ந்தது. ஆனால் தற்போது விலை ரூ.7,031 ஆக குறைந்திருக்கிறது.
எனவே வெள்ளி விலையில் ஏற்ற இறக்கம் இருக்கிறது. புதிய முதலீட்டாளர்கள் இப்போதைக்கு வெள்ளி வாங்க வேண்டாம். ரூ.6,300-6,750 என விலை குறையும் போது வாங்குவதே சிறந்தது. அதே நேரம் ஏற்கெனவே வெள்ளியை வாங்கி வைத்திருப்பவர்கள் அதை விற்க வேண்டிய அவசியம் கிடையாது. வெள்ளி இந்த ஆண்டு மட்டும் சுமார் 181% அளவுக்கு விலை ஏறி, தங்கத்தை விட அதிக லாபத்தை கொடுத்திருக்கிறது என்பது உண்மைதான்" என்று கூறியிருக்கிறார்.
உலகம் முழுவதும் தங்கம் மீதான மவுசு எகிறியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்திருக்கிறது. சீனாவும், ரஷ்யாவும் டாலருக்கு எதிராக தங்கள் உள்நாட்டு கரன்சியை பயன்படுத்தி வருகின்றன. எனவே டாலர் வீழ்ச்சியடைய தொடங்கியிருக்கிறது. அதேபோல, டிரம்ப் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் சேர்த்து வரியை போட்டிருக்கிறார். இதனால் சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் அதிகரித்திருக்கிறது. இது முதலீட்டாளர்களை அச்சமடைய செய்திருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.
எனவே தங்கத்திற்கு டிமாண்ட் அதிகமாகியிருக்கிறது. அதேபோல, உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவிக்க தொடங்கியுள்ளன. இதனாலும் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை, நேற்று ஒரு சவரன் 1,04,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து, ரூ.1,04,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.13,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications