"பத்தே செகண்ட்.. கதை முடிஞ்சிடும்!" நேருக்கு நேர் மோத புதினுக்கு சவால் விடும் எலான் மஸ்க்
வாஷிங்டன்: ஒரு புறம் உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் குறித்து எலான் மஸ்க் கூறும் கருத்துகள் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.
கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சில் போரை ஆரம்பிக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அப்போது தொடங்கிய போர் 4 வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.
உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் இப்போது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாகத் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் போர்
புதினின் இந்தப் போர் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் அறிவித்து வருகிறது. மேலும், சர்வதேச பிரபலங்கள் பலரும் கூட புதினுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். உக்ரைனில் இணையச் சேவை முடக்கப்பட்ட போது, அவர் தனது ஸ்டார் லிங்க் சாட்டிலைட் மூலம் உதவி இருந்தார்.

நேருக்கு நேர்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன்னுடன் நேருக்கு நேர் மோத முடியுமா என்று ட்விட்டர் வழியாக புதினுக்கு சவால் விடுத்திருந்தார் எலான் மஸ்க். மேலும், கூடவே புதின் தனது கரடியையும் அழைத்து வரலாம் என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட் இணையத்தில் உடனடியாக வைரல் ஆனது. மேலும், சிலர் எலான் மஸ்க் எப்படி வெல்வார் என்பதை விளக்கும் வகையில் இருவருக்கும் இடையே பல ஒப்பீடுகளையும் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

10 நொடி
இந்நிலையில், ட்விட்டர் பயனாளி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தச் சண்டை நிச்சயம் 10 வினாடிகளில் முடிந்துவிடும். அதுவும் எலான் மஸ்க் எவ்வளவு தாக்க வேண்டும் என விரும்புகிறோரோ அதைப் பொறுத்தது தானே தவிர வேறொன்றுமில்லை. மேலும், எலான் மஸ்க் 19 வயது இளையவர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது" என்று ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், இதை ஒப்புக்கொள்ளும் வகையில் எலான் மஸ்க் தனது ட்விட்டரில், "நிச்சயமாக அப்படி தான் நடக்கும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

அமைதி பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் துருக்கியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தப் போர் காரணமாக இரு நாட்டு ராணுவம் மட்டுமின்றி, பொதுமக்களின் இயல்வு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications