"வரலாறு படைத்த அமெரிக்கா.." தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது
வாஷிங்டன்: அமெரிக்காவின் தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. தனியார் நிறுவனத்தின் விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும்.
இப்போது சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த சாட்டிலைட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. இந்த முறை நிலவில் தரையிறங்கியது நாசா விண்கலம் இல்லை..

மாறாக ஹூஸ்டனை சேர்ந்த தனியார் நிறுவனம் அனுப்பிய ஒடிஸியஸ் விண்கலம் தான் இப்போது நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.
தனியார் விண்கலம்: நாசாவின் நிதியுதவியுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் நிலவு குறித்து ஆய்வு செய்யப் பல வகை ரோபோக்கள் இருக்கிறதாம். முதற்கட்டமாக நிலவில் தரையிறங்கிய அந்த விண்கலத்தில் இருந்து லேசான சிக்னல் கிடைப்பதாக நாசா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், ஒடிஸியஸ் லேண்டர் இப்போது முழுமையாகச் செயல்படும் நிலையில் இருக்கிறதா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அறுகோண வடிவில் அமைந்துள்ள இந்த விண்கலம் நிலவின் அருகே சென்றதும் தனது வேகத்தைப் பல மடங்கு குறைத்துள்ளது. பிறகு ஒரு மணி நேரத்திற்கு மிக மெதுவாகச் சென்ற அந்த விண்கலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்கியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த விண்கலம் தரையிறங்கி உள்ளது.
விண்கலம்: அந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோவும் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும், இன்னும் தெளிவான சிக்னல்கள் வரவில்லை என்பதால் எதுவுமே உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், முதற்கட்டமாக லேசான சிக்னல்கள் வந்துள்ள நிலையில், இதுவே மிகப் பெரிய வெற்றி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், "எங்கள் கருவிகள் சந்திரனின் மேற்பரப்பில் உள்ளது என்பதை சந்தேகமே இல்லாமல் கூற முடியும். இதற்காக நான் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்" என்றார். கடந்த மாதம் மற்றொரு அமெரிக்க நிறுவனம் அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்க முயன்ற போதிலும் அது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா: அமெரிக்கா 1960களிலும் 1970களிலும் நிலவை ஆய்வு செய்யத் தொடர்ச்சியாக பல்வேறு விண்கலங்களை அனுப்பியது. கடைசியாகக் கடந்த 1972இல் அமெரிக்கா அதன் அப்பல்லோ 17 மூலம் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இப்போது சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனியார் நிறுவனம் மூலம் விண்கலத்தை நிலவுக்கு அமெரிக்கா அனுப்பி இருந்தது
இது தொடர்பாக ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "வரும் காலத்தில் நமது விண்வெளி வீரர்கள் செல்லும் நிலவின் தென் துருவத்தில் என்ன மாதிரியான சூழல் இருக்கிறது என்பதைக் கண்டறிவதே இந்த மிஷனின் முக்கியமான நோக்கம். அங்கே என்ன வகையான தூசி இருக்கிறது.. அது எவ்வளவு சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கிறது, கதிர்வீச்சு சூழல் என்ன? ஆகியவற்றை மனிதர்களை அனுப்பும் முன்பே கண்டறிவதே இதன் நோக்கம்" என்றார்.
அமெரிக்கா 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு மீண்டும் விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு அனுப்ப உள்ளது. அதற்கு முன்பு பல்வேறு சோதனைகளை நாசா நடத்தி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே இந்த தனியார் விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களை ஆய்வு செய்யும் நாசா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications