தேர்தல் பிரசாரம் என நினைச்சீங்களா.. நீதிபதியிடம் வாங்கி கட்டிய டொனால்டு டிரம்ப்.. என்னாச்சு?
வாஷிங்டன்: அமெரிக்காவில் சிவில் மோசடி வழக்கில் ஒன்றில் ஆஜராகி தனது தரப்பு சாட்சியத்தை அளித்த டொனால்டு டிரம்ப், நீதிபதியிடம் அடிக்கடி மோதினார். இதனால், கடுப்பான நீதிபதி, தேர்தல் பிரசாரம் என நினைத்தீர்களா என கடிந்து கொண்டார்.
அமெரிக்க முன்னள் அதிபர் டொனால்டு டிரம்ப்..சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனது அதிரடியான கருத்துக்களால் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவர். வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட டொனால்டு டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். அமெரிக்காவில் பெரும் செல்வந்தரான டொனால்டு டிரம்ப் பல்வேறு தொழில் சாம்ராஜ்யங்களையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் நிறுவனத்திற்கு எதிரான சிவில் வழக்கு ஒன்று அவருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, டிரம்பும் அவரது மகனும் தங்கள் நிறுவனத்தின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி அதன் மூலம் வங்கிகளில் தங்களுக்கு சாதகமாக கடன்கள்பெற்றதாக சிவில் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் நேரில் ஆஜராகி தனது தரப்பு சாட்சியத்தை அளித்தார். டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மகனுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர் சிறை செல்ல வேண்டியது. 250 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். அதுபோக தனது குடும்ப நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்தும் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கில் ஆஜரான டொனால்டு டிரம்ப் நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதியோ, இது ஒன்றும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இல்லை எனவும் டிரம்பை கடிந்து கொண்டார். மேலும் ;பதில்களை சுருக்கமாக அளிக்குமாறும் வலியுறுத்தினார்.மேலும், டிரம்ப் தரப்பு வழக்கறிஞருடனும் நீதிபதி இதே கோரிக்கையை வைத்தார். உங்கள் கட்சிக்காராரை கட்டுப்படுத்துங்கள் என்றார்.
டிரம்ப் நீதிமன்றத்தில் அளித்த தனது வாக்குமூலத்தில், இது மிகவும் நியாயமற்றது என்றும் இந்த வழக்கு எனவும் முட்டாள்தனமான விசாரணை எனவும் கூறினார். மேலும், நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் டிரம்ப் நிராகரித்தார். மேலும் ரியல் எஸ்டேட் சொத்துகளின் மதிப்பீட்டில் "ட்ரம்ப் பிராண்டின்" மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறிய டிரம்ப், "எனது பிராண்டின் காரணமாக நான் அதிபர் ஆனேன்" என்றார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், தனக்கு எதிரான வழக்கில் தேர்தல் தலையீடு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், இது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய சூழல் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் மூன்றாம் தர நாடுகளிலும் வலுவான நிர்வாகம் இல்லாத அரசியல் நிலைத்தன்மை அற்ற நாடுகளில்தான் நடக்கும் எனவும் சாடினார்.












Click it and Unblock the Notifications