ஐபோன் 14 உள்ள சிறப்பு அம்சம்.. உறைபனியிலிருந்து மரணம் வரை சென்ற மாணவர்களை காப்பாற்றியது எப்படி?
வாஷிங்டன்: ஐபோன் 14 ஸ்மார்ட்போனில் அமெரிக்காவின் யூட்டா பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் உறைபனி நீரில் சிக்கிய மூன்று மாணவர்களின் உயிரை காப்பாற்றி உள்ளது. அந்த ஐபோனில் அப்படி என்ன அம்சம் இருந்தது, எப்படி மாணவர்களின் உயிரை காப்பாற்றியது என்பதை இப்போது பார்ப்போம்.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஆப்பிள் கம்ப்யூட்டர்களை தயாரிக்கிறது. இந்த ஐபோன் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்கள், ஆப்பிள் வாட்ச்கள் உலகின் விலை உயர்ந்த போன்களில் ஒன்றாகவும். தரத்திலும், செயல்பாட்டிலும் வேறலெவவில் இவை இருக்கும். அமெரிக்க பணக்காரர்கள் முதல் நம்மூர் பணக்கார்கள் வரை செல்வந்தர்கள் எல்லோரது கையிலும் பெரும்பாலும் ஐபோன் தான் இருக்கும்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச்கள் செல்போன்கள் மற்றும் தகவல் பரிமாற்றமாக மட்டும் இல்லாமல் உடலின் இயக்கத்திற்கும் உதவுகின்றன. சில நேரங்களில் உயிரையும் காப்பாற்றி உள்ளன. இதற்கு முன்பு ஆப்பிள் வாட்ச் காரணமாக சிலர் உயிர் பிழைத்த செய்தியை நாம் படித்திருப்போம்.
அப்படித்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயன்படுத்திய 3 மாணவர்கள் உறைபனியில் இருந்து மீண்டு உயிரோடு வந்திருக்கிறார்கள். ஐபோன் 14 மொபைல் போன் தான் இதற்கு காரணமாக இருந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 இல் செயற்கைக்கோள் வழியாக தொடர்பு கொள்ளும் வகையில் அவசரகால SOS ஐ அறிமுகப்படுத்தி இருந்தது. இது செல்போன் சிக்னல் கிடைக்காதபோது செயற்கைக்கோள் இணைப்பைப் பயன்படுத்தி செய்திகளை அனுப்பவோ அல்லது அழைக்கவோ இந்த எஸ்ஓஎஸ் அம்சம் பயனர்களை அனுமதிக்கிறது. இது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே பலரை காப்பாற்றி உள்ளதாக சொல்கிறார்கள்.
சரி எப்படி அமெரிக்காவின் யூட்டாவின் மாணவர்களை ஐபோன் காப்பாற்றியது என்பதை பார்த்துவிடும். அமெரிக்காவின் பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், அமெரிக்காவில் உள்ள யூட்டாவின் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.
அங்கு ஆய்வின் போது எதிர்பாராத விதமாக அவர்கள் ஆழமான குளிர்ந்த நீரில் சிக்கியுள்ளனர். வெப்பநிலை இயல்பைவிட குறைந்து உறைபனி நிலைக்கு வந்த காரணத்தால் அதில் இருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிக்கிய அந்த இடத்தில் செல்போன் சிக்னல் இல்லை. இந்த காரணத்தால் வெளி உலகை உதவி வேண்டி அவர்களால் தொடர்பு கொள்ள முடியாத கையறு நிலை ஏற்பட்டது. நேரம் செல்ல செலல உறைபனி அதிகமாகி தண்ணீரை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு அவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த மாணவர்களில் ஒருவர் ஐபோன் 14 பயன்படுத்தி வந்திருக்கிறார். அந்த போனில் மொபைல் நெட்வொர்க் மற்றும் Wi-Fi கவரேஜ் இல்லாத நேரத்தில் சாட்டிலைட் துணைகொண்டு அவசர உதவியை வேண்டும் எஸ்ஓஎஸ் தொடர்பை மேற்கொள்ள இயலும். அந்த அம்சத்தின் துணைகொண்டு அந்த மாணவர் அமெரிக்காவின் '911' எண்ணுக்கு உதவி வேண்டி குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். தாங்கள் எப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கி உள்ளோம் என்பதை விவரித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அரிசோனாவில் இருந்து மீட்புக் குழுவினர் அந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக மாணவர்களை காப்பாற்றினர். தொழில்நுட்பங்கள் நம்முடைய வளர்ச்சிக்கும், வாழ்வின் வசதிக்கும் மட்டுமல்ல, நம் உயிரையும் காக்கும் என்பதற்கு ஆப்பிள் ஐபோன் 14 இல் உள்ள எஸ்ஓஎஸ் அம்சம் எடுத்துக்காட்டாக உள்ளது.

ஐபோன் 14 இல் உள்ள SOS என்ற சிறப்பு அம்சம் மூலமாக செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் நம்மால் தொடர்பு கொள்ள முடியும். இந்த வசதி தற்போது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் உட்பட பல நாடுகளில் இருக்கிறது . முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, இந்த சேவை பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது, ஆனால் அதன் விலை எங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றாலும், இந்த வசதியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கவும் ஆப்பிள் திட்டமிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications