"பேரழிவு.." அமெரிக்காவில் சர்வ நாசத்தை ஏற்படுத்திய மில்டன் சூறாவளி.. தத்தளிக்கும் பொதுமக்கள்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடாவை தாக்கிய மில்டன் சூறாவளி அங்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூறாவளியால் அங்குக் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சூறாவளி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் நிறைவடையவே சில நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த சீசனில் அடிக்கடி சூறாவளி தாக்கும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அங்கு ஹெலேன் சூறாவளி தாக்கிய நிலையில், இப்போது மீண்டும் மில்டன் என்ற சூறாவளி தாக்கியுள்ளது.

ஆபத்தான 5ம் வகை சூறாவளியாக இருந்த மில்டன், 3ம் நிலை சூறாவளியாக வலுவிழந்து அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்த சூறாவளி கரையைக் கடக்கும் முன்பு வலுவிழந்து இருந்தாலும் அது புளோரிடாவில் மிக மோசமான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
மில்டன் சூறாவளி: கரையைக் கடக்கும் போது சுமார் சுமார் 195 கிமீ வேகத்தில் காற்று வீசியதாகச் சொல்லப்படுகிறது.. அமெரிக்காவின் புளோரிடாவை அடித்து நொறுக்கிய இந்த மில்டன் சூறாவளியால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பொருள் சேதம் மட்டமின்றி உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மில்டன் சூறாவளியால் பல குடியிருப்புகள் அழிந்த நிலையில், பல ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பத்திரமான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
1.1 கோடி பேர்: புயலால் பல லட்சம் வீடுகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூறாவளியால் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதிப்பு மோசமாக இருக்கிறது. குறிப்பாக அங்குப் பல இடங்களில் சாலைகள் முழுவதும் நீர் தேங்கியுள்ளது. வீடுகள் எல்லாம் மொத்தமாக அழிந்துவிட்டன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேநேரம் ஆபத்துகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.. இன்னுமே சுமார் 1.1 கோடி பேர் வெள்ளம் ஏற்படும் ஆபத்தான பகுதிகளிலேயே இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14 பேர் பலி: இதுவரை இந்த சூறாவளியால் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக புளோரிடாவின் ஃபோர்ட் பியர்ஸ் அருகே உள்ள ஸ்பானிஷ் லேக்ஸ் கன்ட்ரி பகுதியில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.. அதேநேரம் மீட்புப் பணிகள் இன்னுமே தொடர்ந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த புயல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட புளோரிடா மாகாண ஆளுநரிடம் அமெரிக்க அதிபர் பைடன் தொலைப்பேசி வழியாக உரையாடினார். புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்துக் கேட்டுக் கொண்ட அதிபர் பைடன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

சூறாவளி: இதே புளோரிடாவை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஹெலேன் சூறாவளி தாக்கியிருந்த நிலையில், இப்போது மீண்டும் மில்டன் சூறாவளியும் புரட்டிப் போட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் இந்த சூறாவளியால் அங்குப் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கிறது.
அரசியல்: அமெரிக்கா முழுக்க அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் இதிலும் அரசியல் செய்துள்ளார். அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் சென்று சேரவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள டிரம்ப், அங்குள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கே நிவாரணம் செல்வதாகச் சாடியுள்ளார். இருப்பினும், இதை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications