ஈரானுக்கு அபார சக்தி இருக்கு.. இப்படி பதிலடி கொடுப்பாங்கனு நினைக்கல.. மிரண்டுப்போய் டிரம்ப் சொன்ன வார்த்தை
வாஷிங்டன்: ''அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு பிறகு ஈரான் பதிலடி கொடுக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரபு நாடுகளை குறிவைத்து அவர்கள் தாக்குவதால் அதிர்ச்சி அடைந்தோம். அவர்கள் பதிலடி கொடுத்தார்கள். நாங்கள் மட்டும் இல்லாமல் இருந்தால் ஈரான் பிற அரபு நாடுகளை மிரட்டி இருக்கும். ஈரானுக்கு அபார சக்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உள்ளன. ட்ரோன்கள் இருக்கின்றன'' என டொனால்ட் டிரம்ப் பரபரப்பாக பேசி உள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்து வருகிறது. கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கிய இந்த போர் 3வது வாரமாக தொடர்ந்து வருகிறது. முதல் நாள் போரிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். மேலும் சில முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் போர் இன்னும் முடியவில்லை. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் உக்கிரமாக பதிலடி கொடுத்து வருகிறது.
ஈரான் கொடுக்கும் பதிலடி
குறிப்பாக அமெரிக்காவின் ராணுவதளம், கடற்படை தளம், விமான தளம் உள்ள நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. அந்த வகையில் அரபு நாடுகளாக உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், ஓமன் உள்பட பல நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்த போர் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பரவி உள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
அதிர்ச்சியில் டொனால்ட் டிரம்ப்
இதற்கிடையே தான் ஈரான் போர் விவகாரம் குறித்து டொனால்ட் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பிறகு மத்திய கிழக்கின் பிற நாடுகளை ஈரான் தாக்காது என்று நினைத்தோம். ஆனால் ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அபார சக்தியில் ஈரான்
இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈரானால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ஏனென்றால் அவர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். ஈரானுக்கு அபார சக்தி உள்ளது. அவர்களிடம் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளன. நாங்கள் மட்டும் ஈரானை தாக்காவிட்டால் அவர்கள் அரபு நாடுகளை மிரட்டி இருப்பார்கள். இப்போது ஏவப்படும் ஏவுகணைகளை வரும்காலத்தில் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் தற்போது நாங்கள் ஈரானின் ஏவுகணைகளை அழித்துள்ளோம்'' என்று கூறினார்.
தணியாத போர் பதற்றம்
முன்னதாக ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் உரிய முறையில் பதிலடி கொடுப்போம் என்று அந்த நாடு டிரம்புக்கு வார்னிங் செய்தது. அதன்படியே தற்போது ஈரான் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் இன்னும் போர் பதற்றம் தணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications