பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு.. மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்.. 100-க்கும் மேற்பட்டோர் பலி
வாஷிங்டன்: பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
தென்மேற்கு பசிபிக் கடலோரத்தில் அமைந்துள்ள நாடு பப்புவா நியூ கினியா.. இந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் என்ன நடக்கிறது என்று அறியும் முன்பே நிலச்சரிவில் சிக்கி தங்கள் உயிரை இழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் பலி எண்ணிக்கை கிட்டதட்ட 300 இருக்கும் என்று அருகில் உள்ள நிங்கா ரோல் கிராம மக்கள் கூறினர்.
நிலச்சரிவில் சிக்கிய இடங்களில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராட்சத இயந்திரங்களுடன் மீட்பு பணிகளை உள்ளூர் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய இடத்தின் பரப்பளவு அதிகமாக இருப்பதோடு, பாறைகளும் மரங்களும் நிறைந்து இருப்பதால் மீட்பு பணியில் சவால் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் பலியான செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராபே தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எங்கா மாவட்ட அதிகாரிகள் மறுசீரமைப்பு பணிகளையும் தொடங்கியிருப்பதாகவும் பிரதமர் ஜேம்ஸ் மராபே தெரிவித்தார். சேதம் குறித்த முழு தகவல் கிடைக்கவில்லை என்றும் கிடைத்த பிறகு பலியானோர் எண்ணிக்கை பற்றிய முழுமையான விவரங்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications