"ஆண்கள் மட்டும் அழிந்து போவார்கள்.." மரபணு ரீதியாக நடக்கும் சின்ன மாற்றம்! உலகம் மொத்தமாக மாற போகுது
வாஷிங்டன்: ஆண் பாலினத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான Y குரோமோசோம், படிப்படியாக அழிந்து வருகிறதாம். இது ஒரு கட்டத்தில் மொத்தமாக மறைந்து போகவும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படி நடந்தால் அதன் பிறகு பெண்கள் மட்டுமே பிறக்கும் ஒரு உலகம் உருவாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உலகில் எப்போதும் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. நாம் விரும்புகிறோமோ இல்லையோ உலகில் தொடர்ந்து மாற்றங்கள் இயற்கையாகவே நடந்து வருகிறது.

இதற்கிடையே ஆண் பாலினத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான Y குரோமோசோம், படிப்படியாக அழிந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் உலகில் ஆண்கள் மொத்தமாக அழிந்து போகும் ஆபத்தும் இருக்கிறதாம்.
மரபணு மாற்றம்: மரபணு அளவில் நடக்கும் இந்த மாற்றங்கள் வரும் காலத்தில் இரண்டு வகையான மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஒய் குரோமோசோம் அழிந்து போனால் அதற்குப் பதிலாகப் பாலினத்தை நிர்ணயிக்கும் புதிய மரபணு தோன்றலாம். அல்லது இனப்பெருக்கத்தின் வேறு புதிய வழிகள் உருவாகலாம். இருப்பினும், என்ன நடக்கும் என்பது இப்போது ஆய்வாளர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
ஒய் குரோமோசோம் முழுமையாக அழிந்து இனப்பெருக்கம் நடக்க முடியாமல் போனால் அது மனித இனத்தின் அழிவாகவும் இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
ஆய்வுகள்: அதேநேரம் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற ஆய்விதழில் ஸ்பைனி எலியில் நடந்த மரபணு மாற்றம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு குறிப்பிட்ட எலி வகையி்ல இதேபோன்ற மரபணு மாற்றம் நடந்ததாகவும், இப்போது அங்கே ஆணை நிர்ணயிக்கும் புதிய மரபணுவை உருவாக்கியுள்ளது தெரிகிறது. எனவே, மனிதர்களுக்கும் கூட இதுபோல நடக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக XX குரோமோசோம்கள் பெண்ணனையும், XY குரோமோசோம்கள் ஆணையும் குறிக்கிறது. அதாவது Y குரோம்சோம் தான் ஆண்களைக் குறிக்கிறது. இந்த Y குரோமோசோம் அளவு தான் இப்போது குறைந்து வருகிறது. என்ன இது படத்தில் வருவது போல இருக்கே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், உண்மையாகவே நமது மரபணுவில் ஆண்களைக் குறிக்கும் Y குரோமோசோம் குறைந்து வருகிறதாம். இதே நிலை தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் Y குரோமோசோம் முழுமையாக மறைந்துவிடும்.
என்ன சொல்கிறார்கள்: இது குறித்து பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ் கூறுகையில், "166 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் 900என்பதில் இருந்து 55ஆகக் குறைந்துவிட்டது. அதாவது ஒவ்வொரு 10 லட்சம் ஆண்டுகளுக்கு சுமார் ஐந்து Y கிரோமோசோம்கள் அழிகிறது. இந்த விகிதத்தில் போனால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் மீதமிருக்கும் கடைசி 55 Y கிரோமோசோம்களும் அழிந்துவிடும். வரும் காலத்தில் மிகப் பெரிய மாற்றம் நடக்க இருப்பதையே இது காட்டுகிறது" என்றார்,
அதேநேரம் இதுபோன்ற மரபணு மாற்றங்கள் நமது உலகில் நடப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே பல வகையான உயிரினங்களில் இதுபோன்ற மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், பொதுவாக இதுபோன்ற மரபணு மாற்றங்கள் நடக்கும் போது புதிய உயிரினங்கள் உருவாகும். மோல் வோல்ஸ் எலி மற்றும் ஸ்பைனி எலி வகைகளில் இதுதான் நடந்துள்ளது.
வரும் காலம் எப்படி இருக்கும்: அதன்படி பார்க்கும் போது 11 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் ஒரு வகையான சூழல் உருவாகலாம்.. ஒன்று மனிதர்கள் மொத்தமாக அழிந்து யாருமே இருக்க மாட்டார்கள்.. அப்படி இல்லை என்றால் பல வகையான மனிதர்கள் இருப்பார்கள். அதாவது மனிதர்களிலேயே பல இனங்கள் உருவாகும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications