இனி ஒருத்தரும் தப்ப முடியாது..உள்ள வரவும் முடியாது..மெகா பிளானில் கிம் ஜாங் உன்..என்ன பண்றார் பாருங்க
வாஷிங்டன்: வெளி உலக தொடர்பை முற்றிலும் துண்டிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் கிம் ஜாங் உன் ஈடுபட்டுள்ளதாக செயற்கை கோள் படங்களை வைத்து சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியா, அப்படி என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
உலகின் மர்ம தேசமாக விளங்கும் நாடாக உள்ளது வடகொரியா.. அந்த நாட்டில் என்ன நடக்கிறது, மக்கள் எப்படி இருப்பார்கள் என்பது கூட அந்த நாட்டிற்கு மட்டுமே வெளிச்சம். ஊடகங்களுக்கு கட்டுப்பாடு, சமூக வலைத்தளங்களுக்கு அனுமதி இல்லை என சர்வாதிகார ஆட்சியை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நடத்தி வருகிறார். அதுபோக சிறிய குற்றங்களுக்கு கூட மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

அதுமட்டும் இன்றி எந்த மாதிரியான உடை அணிய வேண்டும். முடிகள் இப்படித்தான் வெட்ட வேண்டும் என்பதில் கூட பல கட்டுப்பாடுகள் வடகொரியாவில் உள்ளதாம். கிம் ஜாங் உன்னின் தந்தை இறந்த தினம் வந்தால் அன்றைய தினம் யாரும் சிரிக்கக் கூடாது என்ற அளவுக்கு பல விசித்திரமான கட்டுப்பாடுகள் அந்த நாட்டில் உள்ளன. அதுபோக வெளிநாட்டு சினிமாக்கள் பார்ப்பதற்கு தடை.. குறிப்பாக கொரிய சீரியல்கள் பார்ப்பதற்கு கூட நாட்டு மக்களுக்கு அனுமதி கிடையாது.
மீறி பார்த்தால் மரண தண்டனை கூட விதிக்கப்படும். உள்நாட்டில் இப்படி என்றால் வெளி உலகுடன் எந்த தொடர்பும் இன்றி தனி ஆவர்த்தனத்தை கிம் ஜாங் அன் நடத்தி வருகிறார். வல்லரசு நாடான அமெரிக்காவுடன் வம்பிற்கு நிற்கும் வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனைகளை நடத்தியும் மிரள வைக்கிறது.

வட கொரியாவில் கடுமையான வறட்சி நிலவினாலும் கூட அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது ஆயுத பலத்தை வடகொரியா அதிகரித்து வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவுடன் மட்டும் சில உதவிகளை வடகொரியா பெற்று வருகிறது. இந்த இருநாட்டுடன் எல்லையை வடகொரியா பகிர்ந்து கொள்கிறது. இதனால், வடகொரியாவில் நடக்கும் அட்டுழியங்களை தாங்க முடியாமல் தப்பி ஓடும் மக்கள் பயன்படுத்தும் பாதையும் இதுவாகவே உள்ளது.
அதுபோக கடத்தல் காரர்களும் இந்த வழியையே பயன்படுத்தி வருகிறார்கள். கொரோனாவின் போது கடுமையான கட்டுப்பாடுகளை வடகொரியா விதித்த போதும் அந்த நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் உலக நாடுகளில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதமாக வடகொரியா பிரம்மாண்ட சுவர் எழுப்பவும் திட்டமிட்டது.
அப்போது முதல் இரு எல்லைகளையும் முற்றிலும் மூடும் விதமாக சுவர், வேலிகள் மற்றும் பாதுகாப்பு நிலைகள் ஆகியவற்றை எழுப்பும் பணியை கிம் ஜாங் உன் தொடங்கினார். அப்போது முதல் பல நூறு கி.மீட்டர் தொலைவுக்கு எல்லையில் மேம்படுத்தப்பட்ட வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறதாம். வடகொரியாவில் இருந்து கடந்த ஆண்டு வெறும் 67 பேர் தான் தப்பி தென்கொரியாவில் தஞ்சம் அடைந்து இருந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு 1047 பேர் தப்பியிருந்த நிலையில், கடந்த ஆண்டு எண்ணிக்கை பல மடங்கு குறைந்து இருந்தது. எல்லையில் கொண்டு வரப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்த எண்ணிக்கை குறைந்ததாக தெரிகிறது. எல்லையில் நடைபெறும் இந்த கட்டுமான பணிகள் குறித்து வடகொரிய அரசு மற்றும் ஊடகங்கள் சிறிதளவு தகவல்களை மட்டுமே கசிய விட்டன. எனினும், லண்டனில் உள்ள வடகொரிய தூதரகம் இது பற்றி ஊடகங்கள் தொடர்பு கொண்ட போது கூட தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications