அதெப்படி எதிரி நாட்டு நாடகங்களை பார்க்கலாம்.. பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை விதித்த வடகொரியா
வாஷிங்டன்: வடகொரியாவில் தென் கொரியாவின் நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி தென் கொரிய நாட்டின் நாடகங்களை பார்த்த 2 பள்ளிக்கூட சிறுவர்களுக்கு பொதுவெளியில் வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
உலகின் மிகவும் மர்ம தேசமாக இருக்கும் நாடு வடகொரியா தான். அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றியோ அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் பற்றியோ வெளி உலகத்திற்கும் எதுவும் நிச்சயமாக தெரியாது.
வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என பெரும் சர்வாதிகார ஆட்சியே வடகொரியாவில் நடக்கிறது.

சர்வாதிகார நாடாக..
அதுவும் அந்த நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் அன் போடும் உத்தரவுகள் எல்லாம்.. இப்படியெல்லாம் ஒரு அதிபர் இருப்பாரா.. என்று எண்ணும் அளவுக்கு படு பயங்கரமாக இருக்கும். இப்படித்தான் முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்று கூட அந்த நாட்டில் பொதுமக்களுக்கு தடைகள் உள்ளன. அரசின் விதிகளை மீறினால் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும். குறிப்பாக கடந்த ஆண்டு கிம் ஜான் அன்னின் தந்தை கின் ஜாங் Il உயிரிழந்ததன் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

கடுமையான சட்ட திட்டங்கள்
மொத்தம் 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்ட நாட்களில் பொதுமக்கள் சிரிப்பதற்கு கூட தடை விதிக்கப்பட்டது. கடைகளுக்கு செல்லக் கூடாது.. குடிக்கக் கூடாது என ஏகத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அவ்வளவுதான்.. என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது. அந்த மாதிரிதான் வடகொரியாவில் கடுமையான சட்ட திட்டங்கள் பின்பற்றப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் ஊடகங்களும் தென்கொரிய உளவு அமைப்புகளும் சொல்கின்றன.

அணு ஆயுத சோதனை
சீனாவுடன் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அணு ஆயுத சோதனைகளை செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் அந்த நாட்டில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டில் கடும் பஞ்சம், உணவுப்பொருள் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூட சொல்லப்படுகிறது. ஆனால், இதுபற்றி எந்த செய்தியும் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது இல்லை.

தென்கொரிய நாட்டு சினிமாக்கள்
வெளியுலக தொடர்பே இல்லாமல் அந்த நாட்டு மக்கள் வசித்து வருகின்றனர். இணையதளங்களுக்கு கூட கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அரசு அனுமதித்த இணையதளங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். அரசு சொல்லும் செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகும். இப்படி ஏகத்திற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. இதையும் மீறி வடகொரியாவின் அண்டை நாடும் பரம எதிரி நாடாகவும் உள்ள தென்கொரிய நாட்டு நாடகங்கள், சினிமாக்கள் வடகொரியாவில் பிரபலம் ஆகி வருகின்றன.

பூட்டிய வீட்டிற்குள் இருந்து கொண்டு
இதனால், தென்கொரிய டிராமா ஷோக்கள் ப்ளாஷ் டிரைவ் போன்ற கருவிகள் மூலமாக கடத்தல் முறையில் வடகொரியாவிற்குள் கொண்டு வரப்படுகின்றன. தண்டணையில் இருந்து தப்புவதற்காக யாருக்கும் தெரியாமல் பூட்டிய வீட்டிற்குள் இருந்து கொண்டு இத்தகைய வீடியோக்களை வடகொரிய மக்கள் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை வடகொரிய அரசு இதை கண்டுபிடித்தால் அபராதம், சிறை தண்டனை, ஏன் மரண தண்டனை விதித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை..

நாடகம் பார்த்த பள்ளிக்கூட சிறுவர்கள்
சமூக ஊடகங்களும் வடகொரியாவில் இல்லை என்பதால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து வெளி உலகத்திற்கு தெரியாது. இப்படியான ஒரு சர்வாதிகார ஆட்சிதான் வடகொரியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் படங்களை பார்த்ததற்காக 16 மற்றும் 17-வயதுடைய பள்ளி மாணவர்கள் இருவருக்கு மரண தணடனையை வடகொரியா நிறைவேற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மரண தண்டனை நிறைவேற்றம்
கொரியாவின் மிக பிரபலமான தொடரான கே-டிராமாக்கள் பார்ப்பதற்கு வடகொரியாவில் தடை உள்ளது. இந்த தடையை மீறி இந்த தொடர்களை பார்த்த குற்றத்திற்காக இருவருக்கும் பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதமே இந்த சம்பவம் நடைபெற்று விட்டாலும் கடந்த வாரம்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications