சீன ராணுவத்தின் பலத்தை காட்டுவதற்காக இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்.. அமெரிக்கா குற்றச்சாட்டு
வாஷிங்டன்: சீனா தனது ராணுவத்தின் பலத்தை காட்டுவதற்காக இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா- சீனா எல்லை பிரச்சினையை தீவிரமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணமடைந்தனர். அது போல் சீன தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்த தாக்குதலை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. இதுகுறித்து கிழக்காசியா, பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலாளர் டேவிட் ஸ்டீல்வெல் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் லடாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தியது.
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவுடனான சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை இந்திய சீன எல்லையில் சீனா மிகவும் ஆழமாகவும் அதிக துருப்புகளை கொண்டும் நுழைந்தது. இதுவரை இதுபோன்று ஒன்று வரலாற்றில் நடந்ததே இல்லை.
இந்த மோதல் சீனா படையின் வலிமையை இந்தியாவுக்கு காட்டிக் கொள்வதற்காக இருந்திருக்கலாம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீனா தந்திரமாகவும் இருக்கலாம். எனக்கு தெரியவில்லை என்றார்.
கால்வன் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமானது என கூறுவதை இந்தியா மறுத்துள்ளது. கால்வன் பள்ளத்தாக்கு குறித்து சீனாவின் கருத்து மிகைப்படுத்தப்பட்டது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என இந்தியா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications