பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு.. இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபரை சந்தித்த பிரதமர் மோடி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை திரும்ப இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும் என உறுதி அளித்தார்.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நியூயார்க்கில் நாசாவ் கொலீசியம் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நியூயார்க்கில் உள்ள பாலேஸ் ஹோட்டலில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா கலீத் அல் ஹமாத் அல் சபா அல் சபா -வை சந்தித்து பேசிய மோடி, அதன்பிறகு பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ்-சை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும், காசாவில் நடைபெறும் துயர நிகழ்வுகள் தமக்கு கவலை அளிப்பதாகவும் பிரதமர் மோடி பேசினார். அதேபோல, காசா -இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பிரதமர் மோடி வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications