மோடி அமர டொனால்ட் டிரம்ப் செய்த செயல்.. இருக்கையை நகர்த்தி அதன்பிறகு கொடுத்த போஸ் இருக்கே.. செம
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2 வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பை இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருவரும் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர். அப்போது பிரதமர் மோடி அமர, டொனால்ட் டிரம்ப் இருக்கையை நகர்த்தி கொடுத்ததும், அதன்பிறகு பிரதமர் மோடி கையெழுத்திடும்போது டொனால்ட் டிரம்ப் கொடுத்த போஸ் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக 5 நாட்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். 3 நாள் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி அதன்பிறகு அமெரிக்கா சென்றார்.

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வெள்ளை மாளிகையின் அருகே உள்ள பிளேர் விருந்தினர் மாளிகையில் நேற்று தங்கினார்.
அதன்பிறகு இன்று நம் நாட்டு நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். பிரதமர் மோடியை கட்டியணைத்து டொனால்ட் டிரம்ப் வரவேற்றார். அதன்பிறகு அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகள் பிரதமர் மோடியுடன் அறிமுகம் ஆகினர்.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் உள்ள கையேட்டில் பிரதமர் மோடி கையெழுத்திடுவதற்காக டொனால்ட் டிரம்ப் அழைத்து சென்றார். அப்போது அங்கு போடப்பட்டு இருந்த இருக்கையை பிரதமர் மோடி அமர வசதியாக டொனால்ட் டிரம்ப் லேசாக நகர்த்தி கொடுத்தார். அதன்பிறகு அந்த இருக்கையில் பிரதமர் மோடி அமர்நது கையெழுத்திட்டார்.
அப்போது டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி அமர்ந்து இருந்த இருக்கையின் பின்னணியில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். மோடி கையெழுத்திட்டு முடித்த பின்பு அவர் எழும்புவதற்காக டொனால்ட் டிரம்ப் இருக்கையை பின்நோக்கி இழுத்து உதவி செய்தார். இது பிரதமர் மோடி மற்றும் இந்தியா மீது டொனால்ட் டிரம்ப் வைத்திருக்கும் மரியாதையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பாஜகவினர் வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி அமெரிக்காவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வரும் 5ம் தலைமுறை போர் விமானமான எஃப் 35 ரக விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. இது அதிநவீன விமானமாகும். இதன்மூலம் நம் நாட்டின் விமானப்படை இன்னும் பலம் பெற உள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், டொனால்ட் டிரம்புக்கும் நெருங்கியவருமான தொழிலதிபர் விவேக் ராமசாமி, மற்றும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications