கொரோனா நிர்வாகத்தில் தடுமாறும் அரசு.. இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்த மோடி செல்வாக்கு.. வெளியான டேட்டா
வாஷிங்டன்: இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிவடைந்துள்ளதாக, அமெரிக்க டேட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் பரவலை மெத்தனமாக பிரதமர் நரேந்திர மோடி கையாண்டதாக மக்கள் நினைப்பதால் இந்த அளவுக்கு செல்வாக்கு முதல்முறையாக சரிவடைந்துள்ளது என்கிறது அந்த அறிக்கை.
2014ம் ஆண்டு அறுதிப் பெரும்பான்மை பலத்தோடு பாஜக ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக முதல் முறையாக பதவியேற்றார் . 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மீண்டும் அக்கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமராகி உள்ளார்.

மோடி செல்வாக்கு சரிவு
இந்த நிலையில்தான் அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட்ஸ் டிராக்கர் என்ற டேட்டா இன்டெலிஜென்ஸ் கம்பெனி ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நரேந்திர மோடியின் செல்வாக்கு தொடர்பாக தொடர்ந்து கணித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவாக, 2021ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் நரேந்திர மோடியின் செல்வாக்கு 63 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது. 22 புள்ளிகள் சரிவடைந்து முதல்முறையாக இந்த அளவுக்கு அவர் ரேட்டிங் சரிந்துள்ளது. நாட்டு மக்களுக்கு மோடி மீதான நம்பிக்கையின்மையை காட்டியுள்ளது புள்ளிவிவரம்.

நகரங்களில் மோசம்
இந்தியாவின் தலைநகர் டெல்லி, வர்த்தக தலைநகர் மும்பை, தகவல் தொழில்நுட்பத் தலைநகர் பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் போனதும், ஆக்சிஜன் சப்ளை செய்ய முடியாமல் திணறியதும், நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமை மீது மக்களுக்கு சந்தேகங்களை எழுப்பி உள்ளதால், இந்த அளவுக்கு அவரது செல்வாக்கு சரிவடைந்து உள்ளது என்கிறது இந்த புள்ளிவிபர அறிக்கை.

முதல் அலை ஓகே
இந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்றதில் 59 சதவீதம் பேர் மத்திய அரசு கொரோனா இரண்டாவது அலையை அரசு ஓரளவுக்கு சமாளித்து விட்டது என்றும் நல்லபடியாக சமாளித்து விட்டது என்றும் தெரிவித்துள்ளனர் . ஆனால், கடந்த வருடம் முதல் அலை தாக்கியபோது இவ்வாறு அரசை பாராட்டியவர்கள் எண்ணிக்கை 79 சதவீதமாக இருந்தது. மோடி போதிய முன்னெச்சரிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக மக்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரம் கருத்து
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் மத்திய அரசின் செயல்பாடு பற்றி கூறுகையில், நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்களை தாங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். தங்கள் குடும்பத்தையும், தங்கள் நண்பர்களையும், தங்கள் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, அரசை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவில் அவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். தற்போதைய அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும் போது மக்கள் அந்த மனநிலையில் இருப்பதை பிரதிபலித்துள்ளது.












Click it and Unblock the Notifications