அதிபர் பதவியை விட்டு இறங்கும் வரை ட்ரம்ப் பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்- மார்க் ஜுக்கர் பெர்க் அதிரடி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கை குறைந்தது அடுத்த இரண்டு வாரங்களுக்கு முடக்கி வைப்போம் என்றும், ஒருவேளை இது "காலவரையின்றி" தொடரக்கூடும் என்றும் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வலைப்பதிவில் இன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரம் நடத்தினர் டிரம்ப் ஆதரவாளர்கள். ஒரு வழியாக பல மணி நேரத்திற்கு பிறகு, கலவரக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து வன்முறையை தூண்ட தங்கள் தளங்களை டிரம்ப் பயன்படுத்துவதாக கூறி பேஸ்புக், அதன் துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் ஆகியவை டிரம்ப் அக்கவுண்ட்டை முடக்கி வைத்துள்ளன.
இந்த நிலையில் மார்க் ஜுக்கர்பெர்க் தனது பதிவில் கூறியிருப்பதாவது: "இந்த காலகட்டத்தில் அதிபர் எங்கள் சேவையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிப்பதால் ஏற்படும் அபாயங்கள் மிகப் பெரியவை என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
"எனவே, அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளின் முடக்கத்தை காலவரையின்றி நீட்டிக்கிறோம். குறைந்தபட்சம் அடுத்த இரண்டு வாரங்களாவது, அதாவது அதிகாரத்தின் அமைதியான மாற்றம் முடியும் வரையாவது முடக்கம் நீட்டிக்கப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கையடுத்து டுவிட்டரும் டிரம்ப் கணக்கை நிரந்தரமாக முடக்கும் அறிவிப்பை வெளியிடக் கூடும் என்று அந்தநாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல அனைத்து நாடுகளிலும் அடாவடி அரசியல்வாதிகள் பேஸ்புக், டுவிட்டர் கணக்கு முடக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications