அமெரிக்காவில் பயங்கரம்.. மனைவி, மகனை சுட்டு கொன்றுவிட்டு.. பிரபல இந்திய தொழிலதிபர் தற்கொலை
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள வீட்டில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மேலும், அவரது மனைவி மற்றும் மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து பலரும் அமெரிக்காவிற்கு சென்று வருகிறார்கள். குறிப்பாக ஐடி துறையில் சிறந்து விளங்கும் பலரும் அமெரிக்காவில் செட்டிலாகி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் வெற்றிகரமான வாழ்க்கையையே நடத்துகிறார்கள். இருப்பினும், ஓரிருவர் சில மோசமான நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

பிரபலத் தொழிலதிபர்
அதன்படி அமெரிக்காவில் வசித்து வந்த தொழிலதிபர் 57 வயதான ஹர்ஷவர்தன கிக்கேரி. இவர் கர்நாடக மாநிலம் மைசூரை தலைமையிடமாகக் கொண்ட ரோபாட்டிக்ஸ் நிறுவனமான ஹோலோவேர்ல்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இவரது மனைவி ஸ்வேதா பன்யம் (44).. இந்தத் தம்பதிக்கு 14 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் அமெரிக்காவில் வாஷிங்டன் புறநகர்ப் பகுதியில் வசித்து வந்தனர்.
குடும்பத்தைக் கொன்றுவிட்டு தற்கொலை
கடந்த வாரம் கிக்கேரியின் சடலம் அவரது வீட்டில் மீட்கப்பட்டது. மேலும், அவரது மனைவி மற்றும் மகன் வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அமெரிக்காவில் உள்ள கிங் கிங் கவுண்டி மருத்துவப் பரிசோதகர் இதை உறுதி செய்துள்ளார். தனது மனைவியையும் 14 வயது மகனையும் சுட்டுக் கொன்றுவிட்டு கிக்கோரி தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உறுதியாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. நடந்தது, விசாரணையில் உள்ளது. இந்த சம்பவம் நடந்த போது இளைய மகன் வெளியே இருந்தார். இதனால் அச்சிறுவன் உயிர் பிழைத்துவிட்டான்.
என்ன நடந்தது?
கடந்த வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் அங்கு அவசர உதவி எண்ணுக்கு யாரோ கால் செய்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்பதாகப் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். வீட்டின் ஜன்னலில் ரத்தம் இருப்பதையும் தெருவில் ஒரு ஹாலோ-பாயிண்ட் தோட்டா கிடப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு உண்மையில் என்ன நடந்தது கிக்கோரி இதுபோல செய்ய என்ன காரணம் என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
டெக் துறையில் தொழில் முனைவோராக இருந்த ஹர்ஷவர்தன கிக்கேரி, கர்நாடகாவின் கிக்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர்.. இவர் தனது கல்லூரி படிப்பை மைசூருவிலும் பின்னர் அமெரிக்காவிலும் படித்தார். அவர் சிராகுஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், ரோபோட்டிக்ஸ் துறையிலும் வேலை செய்துள்ளார்.
யார் இந்த கிக்கேரி
கிக்கேரி கடந்த காலங்களில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மைக்ரோசாப்டின் கோல்ட் ஸ்டார், இன்போசிஸின் எக்ஸலன்ஸ் விருது, பாரத் பெட்ரோலியம் உதவித்தொகை, சதுரங்க சாம்பியன்ஷிப் எனப் பல விருதுகளை வென்றுள்ளார். மேலும், அவர் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளிலிருந்து 44 சர்வதேச காப்புரிமைகளை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்த ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications