மீண்டும் பேக் அடித்த டிரம்ப்.. சீனா வைத்த செக் அப்படி! வரிகள் 90 நாட்கள் நிறுத்திவைப்பு! என்ன காரணம்?
வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதாகச் சொல்லி இந்தியா மீது அதிபர் டிரம்ப் 50% வரியை அறிவித்திருந்தார். அதேநேரம் ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் இன்னொரு நாடான சீனாவிடம் டிரம்ப் தொடர்ந்து பம்புகிறார். ஏற்கனவே சீனாவுக்கான வரியை 3 மாதங்கள் டிரம்ப் நிறுத்தி வைத்திருந்த நிலையில், இப்போது மேலும் 3 மாதங்கள் சீனா மீதான வரியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது தொடர்ச்சியாக வரிகளை அறிவித்து வருகிறார். அமெரிக்கா உடன் வர்த்தக டீல் எட்டாத நாடுகள் மீது டிரம்ப் வரிகளை அறிவித்து வருகிறார். ஏற்கனவே இதில் உலகின் பல்வேறு நாடுகள் மீதும் டிரம்ப் வரிகளை அறிவித்துவிட்டார். அப்படித் தான் இந்தியா மீதும் 50% வரியை டிரம்ப் அறிவித்திருந்தார்.

சீனா
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ச்சியாகக் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும் இதன் காரணமாகவே உக்ரைன் மோதல் நீடிப்பதாகவும் டிரம்ப் கூறி இந்த வரியை விதித்தார். இந்தியா மட்டுமின்றி சீனாவும் கூட ரஷ்யக் கச்சா எண்ணெய்யைத் தொடர்ச்சியாக வாங்குகிறது. டிரம்பின் மிரட்டலுக்குப் பயந்து ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்த முடியாது என்பதைச் சீனா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
90 நாட்கள் நிறுத்திவைப்பு
ஆனால், உலக நாடுகளை வரி விதித்துச் சீண்டி வரும் டிரம்ப், சீனாவிடம் தொடர்ச்சியாகப் பம்புகிறார். சீனா மீது வெளிப்படையாக எந்தவொரு கருத்தையும் கூறாமல் இருக்கிறார். சீனா மீது எந்தவொரு வரியும் இல்லையே ஏன் எனச் செய்தியாளர்கள் கேட்டாலும் கூட அதற்கு வாய் திறக்காமல் இருக்கிறார். இதற்கிடையே சீனாவுக்கான வரி விதிப்பை மேலும் 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனாவுடனான வர்த்தகத் தீர்வை எட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதனால் வரி விதிப்பை மேலும் 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் உத்தரவிட்டார். முன்னதாக சீனா பொருட்களுக்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 145% வரியை அறிவித்திருந்தது. அமெரிக்கா அறிவித்திருந்த இந்த 145% வரி நடைமுறைக்கு வருவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே டிரம்ப் மீண்டும் பேக் அடித்திருக்கிறார்.
பின்னணி
கடந்த மே மாதம் இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை அறிவித்தன. இது சர்வதேச வர்த்தகத்தைப் பதற்றத்தில் தள்ளிய நிலையில், கடந்த மே மாதம் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் வரிகளை நிறுத்திவைக்கப் பரஸ்பரம் ஒப்புக்கொண்டன. 90 நாட்களில் வர்த்தக ஒப்பந்தம் எட்ட முடிவு செய்யப்பட்டன. இதையடுத்து இரு நாடுகளும் ஜூலை பிற்பகுதியில் ஸ்டாக்ஹோமில் மீண்டும் சந்தித்தனர். ஆனால் அப்போது புதிய ஒப்பந்தம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்தச் சூழலில் தான் கூடுதல் வரி அமலுக்கு வரும் காலத்தை மேலும் 90 நாட்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைத்திருக்கிறார். அதேநேரம் டிரம்ப் தரப்போ அல்லது வெள்ளை மாளிகை தரப்போ இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.
உண்மை காரணம் இதுதான்
உலக நாடுகள் மீது வரி விதிக்கும் டிரம்ப், சீனாவுடன் மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறார் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்கான விடை அரிய வகை கனிமங்கள் (Rare earth metals). இவை சீனாவில் தான் அதிகம் உள்ளன. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் சீனாவிடம் இருந்து தான் இது செல்கிறது. சிப் உற்பத்தி, மின்சார வாகனங்கள் என அனைத்திற்குமே இதுதான் அடிப்படை.
அமெரிக்கா முதலில் சீனா மீது வரியை அறிவித்த போது அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி செய்யச் சீனா கட்டுப்பாடு விதித்தது. இது அமெரிக்காவையே மிரளவிட்டது. மீண்டும் அதுபோல சீனா தடை விதித்தால் பெரிய சிக்கலாகும் என்பதாலேயே டிரம்ப் அமைதியாக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications