எலான் மஸ்க் நாடுகடத்தல்? அதிபர் டிரம்ப் எடுக்க போகும் அதிரடி முடிவு.. உற்று பார்க்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்கிற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதற்கிடையே எலான் மஸ்க்கை நாடு கடத்துவது தொடர்பாகப் பரிசீலிப்பதாகச் சொல்லி எலான் மஸ்க் பகீர் கிளப்பியுள்ளார். டிரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்தது முதலே பலரை நாடு கடத்தி வரும் நிலையில், அவரது இந்தப் பதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. எலான் மஸ்க் முதலில் டிரம்ப் நிர்வாகத்தில் டாஜ் துறையில் இடம் பெற்றிருந்தார். இருப்பினும், இதனால் அவருடைய நிறுவனங்களில் கவனம் செலுத்த முடியாததால் டாஜ் துறையில் இருந்து அவர் விலகினார்.

எலான் மஸ்க்
இதற்கிடையே பிக் பியூட்டிஃபுல் பில் என்ற மசோதாவை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வர முயன்றது. இதைக் கடுமையாக விமர்சித்து எலான் மஸ்க் கருத்துகளைத் தெரிவித்தார். இதன் காரணமாக டிரம்ப், எலான் மஸ்க் இடையே மோதல் வெடித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே இரு தரப்பிற்கும் இடையே முதலில் மோதல் வெடித்தது. அப்போது மிகக் கடுமையான கருத்துகளை இரு தரப்பும் சொல்லிக் கொண்டன.. பிறகு சில காலம் இரு தரப்பும் அமைதியாக இருந்தனர்.
இந்தச் சூழலில் மீண்டும் டிரம்ப்பின் மசோதாவை எலான் மஸ்க் சாடியிருந்தார். அது பைத்தியக்காரத்தனமான மசோதா என்று விமர்சித்திருந்தார். இதற்கு அதிபர் டிரம்பும் பதிலடி கொடுத்திருந்தார். எலான் மஸ்க் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்றும் வரலாற்றில் எந்தவொரு மனிதரையும் விட அதிக மானியங்களை மஸ்க் பெற்றுள்ளார் என்றும் டிரம்ப் சாடினார்.
மீண்டும் டிரம்ப் vs எலான் மஸ்க்
மேலும், பெடரல் அரசின் ஒப்பந்தங்கள் மற்றும் வரிச் சலுகைகள் இல்லாவிட்டால், எலான் மஸ்கின் நிறுவனங்கள் சரிந்துவிடும் என்றும் அமெரிக்காவில் ராக்கெட் ஏவுதல்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் மின்சார கார் உற்பத்தி முடிவுக்கு வந்துவிடும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.. இது குறித்து டாஜ் துறை கவனிக்க வேண்டும் என்றும் விமர்சித்திருந்தார். இது எலான் மஸ்க்கை ஆத்திரப்படுத்தியது. உடனே அவர் பதிலடியாக, "நான் நிறுத்த தான் சொல்கிறேன். அனைத்து மானியங்களையும் முழுமையாக நிறுத்துங்கள்" என விமர்சித்திருந்தார்.
இரு தரப்பிற்கும் இடையேயான இந்த மோதல் காரணமாக எலான் மஸ்க்கை நாடு கடத்த வேண்டும் என்ற பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளது. அதாவது பலரும் நினைப்பது போல எலான் மஸ்க் அமெரிக்காவை சேர்ந்தவர் இல்லை. அவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். கனடாவில் சில காலம் படித்த அவர், பிறகு அமெரிக்காவுக்கு வந்தார். அவர் குடியுரிமை பெற்றதில் முறைகேடு செய்துள்ளதாகக் கடந்த காலங்களிலேயே புகார் இருந்தது.
எலான் மஸ்க்கை நாடு கடத்தவேண்டும்
இதை இப்போது டிரம்பின் நெருங்கிய உதவியாளர் ஸ்டீவ் பேனன் மீண்டும் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவரது குடியுரிமை நிலையை முறையாக விசாரிக்க வேண்டும். ஏனெனில் அவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்று நான் நம்புகிறேன். எனவே அவரை உடனடியாக நாடுகடத்த வேண்டும்" என்றார்,
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் பேனனின் இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், எலான் மஸ்கின் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்ஸை அரசு நிறுவனமாக மாற்ற வேண்டும் என்றும் பேனன் கூறியிருக்கிறார்.
டிரம்ப் சொன்ன பதில்
இப்படி இரு தரப்பு மோதல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. எலான் மஸ்க்கை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அதிபர் டிரம்ப், "எனக்குத் தெரியவில்லை.. ஆனால், இது குறித்து நிச்சயம் ஆலோசிப்போம்" எனக் கூறியிருக்கிறார். இரு தரப்பு மோதலுக்கு நடுவே எலான் மஸ்க்கின் இந்தக் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications