ஈரானுக்கு தேதி குறிச்சாச்சு! டிரம்ப் சொன்ன முக்கிய மேட்டர்! வெடிக்கும் 3ம் உலகப்போர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற 'போர்டு ஆஃப் பீஸ்' அமைப்பின் தொடக்க விழாவில் பேசிய அந்நாட்டு அதிபர் டிரம்ப், ஈரானுக்கு டைம் கொடுத்திருக்கிறார். இந்த காலக்கெடு முடிவதற்கு முன்னர் ஒப்பந்தத்திற்கு வரவில்லை எனில் மிகப்பெரிய இழப்பை ஈரான் சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஈரான் வைத்திருக்கும் அணு சக்தி தொழில்நுட்பம் அமெரிக்காவின் கண்களை உறுத்தி வருகிறது. உண்மையில், மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ஆதிக்கத்தை ஈரான் எதிர்த்து சண்டை செய்வதுதான் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. எனவே இந்த அணுசக்தி தொழில்நுட்பத்தை காரணம் காட்டி, ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது.

ஈரான் வைத்திருக்கும் அணுசக்தி தொழில்நுட்பத்தை கொண்டு அணு ஆயுதங்களை உருவாக்க கூடாது என்றும், இதற்காக தங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இப்படி ஒப்பந்தம் செய்துக்கொண்டால் ஈரான் வசம் உள்ள அணுசக்தி தொழில்நுட்பம் என்ன என்பது குறித்து அமெரிக்காவுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மட்டுமல்லாது, யுரேனிய செறிவூட்டலை நிறுத்த வேண்டும். இது ஈரானுக்குதான் சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் ஈரான் திண்டாடி வருகிறது. இப்படி இருக்கையில்தான், ஈரானை மிரட்டும் விதமாக அமெரிக்காவின் மிகப்பெரிய போர் கப்பல்களான, யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் யுஎஸ்எஸ் ஜெரால்டு போர்டு ஆகியவற்றை ஈரான் கடல் பகுதியில் டிரம்ப் நிலை நிறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று போர்டு ஆஃப் பீஸ்' அமைப்பின் தொடக்க ழாவில் பேசிய டிரம்ப், ஈரானுக்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாக கூறியிருக்கிறார். இந்த 10 நாட்கள் அந்நாட்டுக்கு மிக முக்கியமானது என்றும், இதற்குள் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு எட்டப்படவில்லை எனில் ஈரான் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
மறுபுறம் ஈரான் தனது ராணுவ பலத்தை அதிகரிக்க, ரஷ்யாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. வெனிசுலாவில் நடந்ததை போலதான் ஈரானிலும் நடக்கும். ரகசியமாக அமெரிக்க படைகள் ஈரானுக்குள் நுழைந்து முக்கிய தலைவர்களை கைது செய்யும். எனவே இதனை தடுக்க ஈரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
யுரேனியம் செறிவூட்டல்
யுரேனியம் என்பது அணுசக்திக்கு மிக முக்கியமான ஒன்று. அதை எத்தனை சதவிகிதம் செறிவூட்டுகிறோம் என்பதுதான் விஷயம். இயற்கையில் கிடைக்கும் யூரேனியம் 0.7% மட்டுமே செறிவூட்டப்பட்டிருக்கும். இதனை 3-5% வரை செறிவூட்டினால் அணுமின் நிலையங்களில் பயன்படுத்தலாம். அதுவே 5-20% வரை செறிவூட்டினால் நவீன அணு உலைகளில் பயன்படுத்த முடியும். இதை 20%க்கும் அதிகமாக செறிவூட்டும்போது மருத்துவத்துறையிலும், 80-90% வரை செறிவூட்டும்போது அணு ஆயுதம் தயாரிக்கவும் பயன்படுத்த முடியும்.












Click it and Unblock the Notifications