பாகிஸ்தானுக்கு தேங்க்ஸ் சொன்ன டிரம்ப்! பின்னால் இருக்கும் பலே திட்டம்.. இந்தியா நிம்மதி
வாஷிங்டன்: 'அபே கேட் குண்டுவெடிப்பு' சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க பாகிஸ்தான் உதவியதாக கூறி டிரம்ப் அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அதே நேரம், பாகிஸ்தானுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் அவர் ஆலோசித்து வருகிறார்.
குறிப்பாக பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இது ஒருவகையில் இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்திருக்கிறது.

நேற்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பேசிய டிரம்ப், "அபே கேட் குண்டுவெடிப்பு கொடூரத்தை நடத்தியதில் முக்கிய பங்கு வகித்த குற்றவாளியை கைது செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குற்றம்சாட்டப்பட்ட நபர் அமெரிக்காவின் நிதியை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இந்த கொடும் குற்றவாளியை கைது செய்ய உதவிய பாகிஸ்தானுக்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்றைய தினம் 13 குடும்பங்களுக்கு மிகவும் சோகமான நாள். இந்த தாக்குதலில் குழந்தைகள் பலரும் கொல்லப்பட்டனர். 42 பேர் வரை படுகாயமடைந்தார்கள்" என்று கூறியிருந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதியன்று ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஹமித் கர்ஜாய் சர்வதேச விமான நிலையம் அருகே, அபே கேட் (Abbey Gate) பகுதியில் அமெரிக்க ராணுவத்தை குறி வைத்து தாக்குதல் நடந்தது. தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்களும், 170க்கும் அதிகமான ஆப்கான் மக்களும் கொல்லப்பட்டனர். ISIS-K (இஸ்லாமிய அரசு - கோரசான் பிரிவு) இந்த தாக்குலுக்கு பொறுப்பேற்றது. தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ஆப்கானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவிருந்தது.
அமெரிக்க படைகளுடன் சேர்த்து, ஆப்கான் வாழ் அமெரிக்கர்களும் வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றும் நடவடிக்கை நடந்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலால் வெளியேற்றும் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டது. அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது சந்தித்த கடைசி தீவிரவாத தாக்குதல் இதுதான்.
இந்த தாக்குதலில் முக்கிய பங்காற்றியவராக முகமது ஷரிபுல்லா அறியப்படுகிறார். அவரை கைது செய்து நாடு கடத்தி அமெரிக்கா அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளதாக டிரம்ப் தற்போது பாராட்டியுள்ளார். டிரம்ப் யாரையாவது பாராட்டுகிறார் எனில், நிச்சயம் அவர்களுக்கு பின்னால் குழி தோண்டப்படுகிறது என்று அர்த்தம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், இனி பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவுக்குள் நுழையவும் தடை விதிக்கப்படலாம் என்றும் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில், கடந்த ஜன.20ம் தேதி டொனால்ட் டிரம்ப் ஒரு அறிவிப்பு ஆணையை (Executive Order) வெளியிட்டார். அமெரிக்காவில் நுழைய விரும்பும் வெளிநாட்டவர்கள் மீது கடுமையான பாதுகாப்பு சோதனை (Security Vetting) மேற்கொள்ள வேண்டும் என இந்த ஆணை வலியுறுத்துகிறது.
மட்டுமல்லாது தேவையில்லாத நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைபவர்களும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுவார்கள். குறிப்பாக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விசா மறுக்கப்படும். மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பகுதியளவு தடை விதிக்கப்படும். இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தானும் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படி நடந்தால் இந்தியாவுக்கு சில நன்மைகள் இருக்கிறது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வழியாக வெளியேறும் தீவிரவாதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்தியாவும்-அமெரிக்காவும் பாதுகாப்பு விஷயத்தில் மேலும் நெருக்கமாகலாம்.
ஆனால், மறுபுறம் பாகிஸ்தானும் சீனாவும் முன்னெப்போதைவிடவும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications