புலம்பெயர் மக்களை தேடி பிடிக்க டார்கெட்! டிரம்ப் நடவடிக்கையால் அமெரிக்காவில் புது சலசலப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு போனால் எப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டுக்கு புலம் பெயர்கிறார்கள். இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக இப்படி புலம் பெயர்ந்தவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பணியை டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. தற்போது ஒரு நாளைக்கு 3000 பேர் என ஆண்டுக்கு 10 லட்சம் பேரை கைது செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பைடன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்குள் சுமார் 80 லட்சம் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக ஊடுருவியதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டுகிறது. இவர்களை வெளியேற்றுவதுதான் தங்களின் முதல் பணி என்றும் கூறி வருகிறது.

அமெரிக்க வெள்ளை மாளிகை துணைத் தலைமைத் தளபதி ஸ்டீபன் மில்லர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையை மே.21ம் தேதி நடத்தியிருந்தனர். அதில், ஒரு நாளைக்கு 3000 பேர் என்கிற விகிதத்தில் மொத்தம் 10 லட்சம் பேரை இந்த ஆண்டுக்குள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என ஆக்சியோஸ் செய்தி ஊடகம் கூறியிருக்கிறது.
இதில் ஸ்டீபன் மில்லர், சட்டவிரோத குடியேற்றத்தை கடுமையாக எதிர்ப்பவர். இவர்தான் ஒரு நாளைக்கு 3000 பேர் என்கிற எண்ணிக்கையை நிர்ணயித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். 2022ம் ஆண்டு வெளியான ஆய்வின்படி மொத்தம் 7.25 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் 90,000 பேர் குடியேறியதாகவும், இதில் 44,000 பேர் அமெரிக்கா-கனடா எல்லையில் பிடிபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியேற்றம் என்பது அவ்வளவு பெரிய பிரச்சனையா என்று கேட்டால், 21ம் நூற்றாண்டில் இதை பெரிய பிரச்சனையாக சிலர் சித்தரிக்கின்றனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் குடியேற்றங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. பறவைகள், விலங்குகளை போல மனிதர்களும் குடியேறுகிறார்கள்.
நல்ல வாழ்க்கை சூழல், கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்டவை குடியேற்றத்திற்கு பிரதான காரணங்களாக இருக்கின்றன. டிரம்ப் சட்டவிரோத குடியேறிகளை ஏலியன்கள் என்று அழைக்கிறார். இவர்களை கை, கால்களில் விலங்கு போட்டு போர் கைதிகளை போல அவர் போர் விமானங்களில் நாடு கடத்தி வருகிறார். இந்தியர்களையும் இப்படி சமீபத்தில் நாடு கடத்தியிருந்தார்.
அப்படி பார்த்தால் அமெரிக்காவின் பூர்வகுடிகள் செவ்விந்தியர்கள்தான். இப்போது உள்ள வெள்ளையின மக்கள் பின்னாட்களில் வந்து குடியேறியவர்கள்தான். வரலாற்று ரீதியாக பார்த்தால் இதுதான் உண்மை. நிஜம் இப்படியாக இருக்கும்போது சட்டவிரோத குடியேறியவர்களை ஏலியன்கள் என்று அழைப்பது எப்படி சரியாக இருக்க முடியும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications