டிரம்ப் பதவியேற்றதும் அதானி நிம்மதி.. லஞ்ச வழக்கை அமெரிக்கா வாபஸ் பெறும்! அமெரிக்க வழக்கறிஞர் தகவல்
வாஷிங்டன்: சூரிய ஒளி திட்டம் தொடர்பாக அதானி குழுமத்தினர் சுமார் ரூ. 2000 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அதானி மீதான குற்றச்சாட்டுகள் திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது என்று பிரபல இந்திய அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அதானி குழுமத்தினர் மீது அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கடந்த வாரம் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதானி நிறுவனம் தனது ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ள சுமார் ரூ.2000 கோடி லஞ்சம் தரப்பட்டதாகப் புகார் எழுந்தது.

அதானி லஞ்ச புகார்: மொத்தம் ரூ. 2000 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் குறிப்பாக ஆந்திரப் பிரதேச அதிகாரிக்கு மட்டும் ரூ. 1750 கோடி லஞ்சம் தரப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.. அதானி நேரடியாக இதில் சிலருக்கு லஞ்சப் பணம் தொடர்பாக உறுதி அளித்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் அதானி மீது கிரிமினல் மற்றும் சிவில் என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனால் அதானி கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படவும் கூட வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, இந்த வழக்கு வாபஸ் பெறப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா கூறியிருக்கிறார்.
அமெரிக்க வழக்கறிஞர்: இது தொடர்பாகப் பிரபல இந்திய அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா கூறுகையில், "ஒவ்வொரு புதிய அதிபர் பதவியேற்கும் போதும் தங்கள் புதிய டீமை எடுத்து வருவார்கள். அதேபோலத்தான் டிரம்பும் தனது புதிய டீம் உடன் வருவார். அவர் ஏற்கனவே இப்போதுள்ள எஃப்.பி.ஐ செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருக்கிறார்.
பொதுவாக அமைச்சரவையில் ஒருவரைச் சேர்க்கும் முன்பு எஃப்.பி.ஐ அவர்களின் பின்னணியைச் சோதிக்கும். ஆனால், டிரம்ப் அதெல்லாம் வேண்டாம் எனக் கூறிவிட்டார். அதாவது யார் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.. யார் மீது தேவையில்லை என்பதை டிரம்ப் முடிவு செய்கிறார்.
வாபஸ் பெறப்படலாம்: அடுத்தாண்டு ஜனவரி மாதம் டிரம்ப் அதிபராகப் பதவியேற்கும் நிலையில், அப்போது அதானி தரப்பு இந்த விவகாரத்தை எழுப்பலாம். அதானி மீதான கிரிமினல் அல்லது சிவில் குற்றச்சாட்டுகள் தகுதியற்றதாக அல்லது குறைபாடு கொண்டதாக டிரம்ப் அரசு கருதினால் அந்த வழக்குகள் வாபஸ் பெறப்படலாம்.
என்ன காரணம்: இந்த வழக்கைப் பொறுத்தவரை அதில் குற்றஞ்சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் அமெரிக்காவில் வசிக்கவில்லை.. இதுவே பிரதான சிக்கல்.. அமெரிக்கச் சட்டங்களை வெளிநாட்டிற்குப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. அதாவது அமெரிக்காவின் சட்டத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லை. ஆனால், அந்த அமெரிக்கச் சட்டங்களை வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமா என்பதிலேயே கேள்வி எழுகிறது" என்றார்
அதாவது என்ன தான் வழக்குப் போட்டு விசாரணை நடத்தினாலும், அதானி இந்திய நாட்டவர் என்பதால் அவர் மீது அமெரிக்க நாட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதே இவரது பாயிண்டாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications