"உக்ரைன் மோதல் 50 நாளில் முடியணும்! இல்லைனா.." புதினுக்கு கெடு விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: உக்ரைன் ரஷ்யா மோதல் ஆண்டு கணக்கில் தொடரும் நிலையில், டிரம்ப் இது தொடர்பாக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதாவது ரஷ்யாவுக்கு 50 நாட்கள் கெடு விதித்துள்ள டிரம்ப், அதற்குள் புதின் போரை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளார். இல்லையென்றால் ரஷ்யா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் சர்வதேச அளவில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர முயன்று வருகிறார். மத்தியக் கிழக்கில் இஸ்ரேலை சுற்றி நிலவிய பதற்றத்தைத் தணிக்கக் கூட அவர் பெரியளவில் முயற்சி செய்தார். கடந்த மாதம் இஸ்ரேல் ஈரான் இடையே போர் வெடித்த போதும் கூட அதை முடிவுக்குக் கொண்டு வர முயன்றதாக டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்ப் எச்சரிக்கை
அதேநேரம் ரஷ்யா உக்ரைன் மோதலைப் பல காலமாக முடிவுக்குக் கொண்டு வர அவர் முயன்று வருகிறார். ஆனாலும், புதின் இந்த விவகாரத்தில் பிடி கொடுக்க மறுத்தே வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு ஆரம்பித்த ரஷ்யா உக்ரைன் மோதல் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா உடன்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
50 நாட்கள் கெடு
அதாவது அடுத்த 50 நாட்களில் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் இல்லையென்றால் அதிகபட்ச வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நாங்கள் அடுத்த கட்ட வரிகளை விதிக்கப் போகிறோம். 50 நாட்களில் உடன்பாடு எட்டவில்லை என்றால் வரிகளை விதிப்பது உறுதி.. அவர்கள் மீது 100% வரிகளை விதிக்கப் போகிறோம். அது உறுதி" என்றார்.
உக்ரைன் போரை புதின் கையாளும் விதத்தால் ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார். போர் நிறுத்தத்தை அடையப் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துகிறது. இதனால் வேறு வழியில்லாமல் அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆயுதங்களைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
புதின் மீது அதிருப்தி
முன்னதாக, ஒரு பக்கம் அமைதியை விரும்புவதாக புதின் கூறிக் கொண்டே மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதாக ட்ரம்ப் விமர்சித்தார். புதின் மீது அதிருப்தி அதிகரித்து வருவதால், ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்கப்படலாம் என்று ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்ப், "அதிபர் புதினின் செயல்பாடுகளால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்.. அவர் சொன்னதைச் செய்பவர் என்று நினைத்தேன். அவர் அழகாகப் பேசுவார், ஆனால் இரவில் குண்டுகளை வீசி மக்களைக் கொன்று குவிக்கிறார். அது எனக்குப் பிடிக்கவில்லை." என வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
காரணம் என்ன
ரஷ்யா உக்ரைன் மோதல் தொடர்வது அந்த இரு நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக அது சர்வதேச வர்த்தகத்தையும் கூட கடுமையாகப் பாதிக்கிறது. சர்வதேசப் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் முயன்று வருகிறார். ஆனாலும் ரஷ்ய அதிபர் புதின் அதற்குப் பிடிகொடுக்காமல் தொடர்ந்து மோதல் போக்கைக் கையாண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications