இந்தியாவுக்கு வரியை உயர்த்துவேன்.. எகிறி குதிக்கும் டிரம்ப்! ரஷ்ய நட்பு கண்ணை உறுத்துது
வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து எதிர்த்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு போட்ட வரியை மேலும் அதிகரிப்பேன் என்று கொக்கரித்துள்ளார்.
ரஷ்யாவால் உக்ரைன் மக்கள் பலியாவதை இந்தியா கண்டுகொள்ளவில்லை என்றும், ரஷ்யாவிடம் கூடுதல் எண்ணெய் வாங்கி அதை வெளிச்சந்தையில் இந்தியா கூடுதல் விலைக்கு விற்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

டிரம்ப் தனது பதிவில், "இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்வதுடன், அவற்றில் பெரும்பாலானவற்றை வெளிச்சந்தையில் பெரும் லாபத்திற்கு விற்பனை செய்கிறது. ரஷ்யப் போரால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இதன் காரணமாக, இந்தியா அமெரிக்காவிற்குச் செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்" என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இருப்பினும், இந்த புதிய வரி விகிதம் எவ்வளவு என்பது குறித்த எந்த விவரங்களை அவர் விளக்கவில்லை.
ஏற்கெனவே ரஷ்ய எண்ணைய்யை வாங்குவதாக கூறி இந்தியா மீது 25% அளவுக்கு வரியை விதித்திருக்கிறார். இந்நிலையில் இந்த வரியை மேலும் அதிகரிப்பதாக கூறியிருப்பது இந்தியாவுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்தியா இதை எப்படி சமாளிக்க போகிறது என்பதே தற்போதைய கேள்வி. ஏற்கெனவே நாம் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திருந்தோம். இதேபோல ஏழரையை கூட்டிய டிரம்ப், ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கினால் வரி போடுவோம் என எச்சரித்தார். எனவே நாம் ரஷ்யாவுக்கு மாறினோம். இப்போது இங்கு வந்தும் பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறார்.
ரஷ்ய எண்ணெய்யை நாம் நம்மூர் கரன்சியை, அதாவது ரூபாயை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். அரபு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கினால் டாலரில் கொடுக்க வேண்டும். எனவே இது அமெரிக்காவை தொடர்ந்து எச்சரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications