"அமெரிக்காவை தொட்டால்.. அடுத்த நொடி கனவிலும் நினைக்காத பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு டிரம்ப் வார்னிங்
வாஷிங்டன்: இஸ்ரேல் ஈரான் இடையேயான தாக்குதல் தொடரும் சூழலில் இரு உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையே இந்தத் தாக்குதலில் அமெரிக்காவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என அந்நாட்டின் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரம் ஒருவேளை அமெரிக்கா தாக்குதல் நடத்தினால்..
மத்திய கிழக்கில் இப்போது மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தனை காலம் இஸ்ரேல் தன்னை சுற்றி இருக்கும் நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகள் உடன் தான் மோதலில் ஈடுபட்டு இருந்தது. ஆனால், இப்போது இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் வெடித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் உலக அரங்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பேரழிவு
அதேநேரம் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும் சிலர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதேநேரம் ஈரானுக்கும் மிகப் பெரிய எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார். ஒருவேளை அமெரிக்கா தாக்குதலை நடத்தினால் அது பேரழிவையே ஏற்படுத்தும் என அவர் கூறியிருக்கிறார்.
பின்னணி
நேற்று சனிக்கிழமை இரு நாடுகளுக்கும் இடையேயான தாக்குதல் தீவிரமடைந்தது. தெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. மேலும், பாரசீக வளைகுடா அருகே உள்ள ஈரானுக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தையும் தாக்கியது.
டிரம்ப் மிரட்டல்
இந்தத் தாக்குதலுக்குத் தான் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதைத் தான் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதலை எளிதாக முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்கச் சொத்துக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி தரப்படும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "ஈரான் எந்த விதத்திலாவது அமெரிக்காவைத் தாக்கினால்.. அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும், சக்தியும் இதுவரை கண்டிராத வகையில் உங்கள் மீது இறங்கும்" என்று வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார். அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், டிரம்பின் இந்த நேரடி எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்கள்
ஈரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அப்பட்டமான ஆக்கிரமிப்பு மற்றும் மிகவும் ஆபத்தான செயல் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி வர்ணித்துள்ளார். மேலும், இது அமெரிக்காவுடனான ஈரானின் அணுசக்தி பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் 'ஆபரேஷன் ரைசிங் லயன்' நடவடிக்கைக்குப் பதிலடியாக 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3' என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்கள், விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் குறிவைக்கப்பட்டனர். சனிக்கிழமை தொடங்கிய ஈரானின் தாக்குதல்கள் இரவு முழுவதும் நீடித்தன.
அதிகரிக்கும் பதற்றம்
இஸ்ரேல் நகரங்களான தம்ரா, பட் யாம் மற்றும் ரெஹோவோட் ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்களில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர்.. மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தம்ராவில் நான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில், பட் யாம் நகரில் ஆறு பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோக், பாதிக்கப்பட்ட மூன்று நகரங்களின் மேயர்களுடன் தொலைப்பேசியில் உரையாடினார். மேலும், வரும் காலங்களில் ஈரானின் தாக்குதல்களிலிருந்து ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று தரைமட்டமானது. இதில் 29 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தொடர் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நேரடியாக மோதல் வெடிக்குமோ என்ற அச்சத்தையும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications