துருக்கி-சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் பிறந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு..ஆனாலும் சோகம்
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டன்: துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து பெற்றோர் பலியான நிலையில் அந்த தம்பதியின் பச்சிளம் குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
துருக்கியில் நேற்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.
துருக்கியின் காசியோன்டேப் நகரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் நகரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இரு நாட்டிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து நில அதிர்வுகள்
நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் லெபனான், சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. அதிகாலை 5 மணி அளவில் தொடங்கிய இந்த நிலநடுக்கத்தால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொள்ள நேரிட்டது. இதனால் உயிர்சேதம் அதிகமாக இருந்தது. நிலநடுக்கத்தால் துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,419 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,534 ஆகவும் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் துணை அதிபர் ஃபாட் ஒக்தே கூறினார்.

5100 பேர் பலி
சிரியாவில் பலி எண்ணிக்கை 1,602 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இரு நாடுகளிலும் சேர்த்து பலியானவர்களில் எண்ணிக்கை 5,102 ஆக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு 200-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன. துருக்கி - சிரியா எல்லையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. சிரியாவின் வடகிழக்கு பகுதியில் பல கட்டிடங்களும் இடிந்து தரை மட்டம் ஆகின.

உயிர் தப்பிய பச்சிளம் குழந்தை
இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலரது உடல்களும் மீட்கப்படும் துயரங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த துயரத்திற்கு மத்தியிலும் இடிபாடுகளுக்குள் இடையில் இருந்து புதிதாக பிறந்த ஒரு பெண்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மீட்பு பணியாளர்களை நெகிழ்ச்சி அடையும் விதமாக இது அமைந்து இருந்தது. எனினும் இதிலும் துயரமாக அந்த பச்சிளம் குழந்தையின் பெற்றோரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். நிலநடுக்கத்திற்கு பிறகு இடிபாடுகளுக்குள் இந்தக் குழந்தை பிறந்து இருப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இதயத்தை ரணமாக்கும் வகையில்
இதனிடையே பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி பார்ப்பவர்களின் கண்களை கண்ணீரை வரவழைக்கும் விதமாக அமைந்தது. நெட்டிசன்கள் பலரும், துயரமான தருணத்திலும் பச்சிளம் குழந்தை உயிருடன் பிறந்தது பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் குழந்தையின் பெற்றோர் இருவருமே பலியானது இதயத்தை ரணமாக்கும் வகையில் அமைந்து இருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications