அமெரிக்கா நாடாளுமன்ற கலவரம்... வன்முறையை விரும்பவில்லை என்கிறார் டிரம்ப்
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், தன் மீது குற்றஞ்சாட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கடும் கோபம் இருந்தாலும் வன்முறையை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: நான் எந்த வன்முறையும் விரும்பவில்லை. என்மீதான இந்த குற்றச்சாட்டுகள் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். என்மீது தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர் அது உண்மையில் அவர்கள் செய்யும் ஒரு அபத்தமான விஷயம் என்று கூறியுள்ளார் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு நாடாளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வழிமுறைகளை கையாண்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் காவலர் ஒருவர் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்க வரலாற்றில் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக அமைந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வன்முறையை தூண்டு வகையில் செயல்பட்டதாக அதிபர் டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன.
இதையடுத்து அவரை அதிபர் பதவியில் இருந்து 25 வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். புதிய அதிபராக ஜோ பிடன் வருகிற 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன்பாகவே டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க ஜனநாயக கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.
இதையடுத்து 25வது சட்ட திருத்தத்தை ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு குடியரசு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை. இந்த நிலையில் ஜனநாயக கட்சியினர் 2 வது முறையாக டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றம் இன்று கூடி அதிபருக்கான அதிகாரங்களை பறிக்க வகை செய்யும் 25-வது சட்ட திருத்தம் மீது முடிவெடுக்கும்.
அந்த அடிப்படையில் டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மீது நாடாளுமன்றத்தில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வன்முறையை தொடர்ந்து தலைநகர் வாஷிங்டனில் பொது அவசரநிலை அமல்படுத்தப்பட்டு இருந்தது.
சீனா, பாகிஸ்தான் ஜோடியா எதிர்த்தாலும்... அதை முறியடிக்க நமது ராணுவம் ரெடி... எம்.எம்.நாரவனே உறுதி!
ஜோ பிடன் அதிபராக பதவி ஏற்கும் 20ஆம் தேதி ஆயுதங்களுடன் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தலைநகர் வாஷிங்டனில் அவசரநிலையை அறிவித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த அவசர நிலை வருகிற 24ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வன்முறையை தடுக்கும் விதமாக டிரம்பின் ஆதரவாளர்கள் 70 ஆயிரம் பேரின் டுவிட்டர் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கி உள்ளது
பெரும் கலவரம் நடைபெற்று ஒரு வாரத்திற்குப் பிறகு டெக்சாஸின் அலமோவில் உள்ள எல்லைச் சுவருக்கு பயணம் மேற்கொண்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், நான் எந்த வன்முறையும் விரும்பவில்லை.என்மீதான இந்த குற்றச்சாட்டுகள் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் அவர்கள் தொடர்ந்து என்மீது குற்றம்சாட்டுகின்றனர். அது உண்மையில் அவர்கள் செய்யும் ஒரு அபத்தமான விஷயம் என்றார். கலவரத்திற்கு முன்பு தான் பேசியது முற்றிலும் பொருத்தமானது என்றும் கூறியுள்ளார்.
கேபிடல் தாக்குதல் தொடர்பாக போராட்டத்தை தூண்டியது என்ற தொடர்ச்சியான குற்றஞ்சாட்டும் நடவடிக்கை, தனக்கு எதிரான சூழ்ச்சியின் தொடர்ச்சியாகும் என்றும் டிரம்ப் கூறினார். அதே நேரத்தில் கலவரத்தைத் தூண்டியது தொடர்பாக எந்தப் பொறுப்பையும் அவர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.