அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இந்திய நீதிபதியின் மகள்.. "சரமாரியாக பாய்ந்த குண்டுகள்!" கொடூரம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் குறித்த சில கூடுதல் தகவல்களும் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் துப்பாக்கியை வைத்திருக்க உரிமம் பெற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு புல்லெட்களுக்கும் கூட முறையாகக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
அதேநேரம் உலகின் மற்ற அனைத்து நாடுகளிலும் துப்பாக்கிகளை வைத்துக் கொள்ள இதே அளவுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. குறிப்பாக அமெரிக்காவில் துப்பாக்கிகளும் சரி புல்லெட்களும் சரி சர்வ சாதாரணமாகவே கிடைக்கும்.

துப்பாக்கிச் சூடு: இதன் காரணமாகவே அங்குத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அங்கே துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆயுதங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகள் வராமல் பார்த்துக் கொள்கின்றன. இதன் காரணமாக அங்கே ஏற்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் உயிரிழப்புகளும் அதிகரித்தே வருகிறது.
சமீபத்தில் கூட அதேபோல ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியது. அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள டல்லாஸில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்றைய தினம் திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். கண்ணில் பார்க்கும் நபர்களை எல்லாம் அவர் சுட்டுத் தள்ளினார். இதையடுத்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபர் கொல்லப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்தவர்: இருப்பினும், அதற்கு முன்பே 9 பேர் அவரது கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். இதனிடையே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட 9 பேரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த 27 வயதான இளம்பெண் ஒருவர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
அந்த பெண் ஐஸ்வர்யா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மெக்கின்னி என்ற பகுதியில் வசித்து வந்த அவர், தனது நண்பருடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது இந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
நீதிபதியின் மகள்: சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் மாலின் வெளியே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த இந்த ஐஸ்வர்யா தெலங்கானாவைச் சேர்ந்தவர் ஆவர். அங்குள்ள ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியின் மகள் தான் ஐஸ்வர்யா.
இவர் பெர்ஃபெக்ட் ஜெனரல் கான்ட்ராக்டர்ஸ் எல்எல்சி நிறுவனத்தில் திட்டப் பொறியாளராகப் பணிபுரிந்தார். ஐஸ்வர்யாவின் உயிரிழப்பை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
அன்று என்ன நடந்தது: இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குச் சற்று நேரத்திற்கு முன்பு தான், ஐஸ்வர்யா தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசியிருந்தார். இந்தத் துப்பாக்கிச் சூடு பற்றி அறிந்ததும் மீண்டும் அவர்கள் ஐஸ்வர்யாவைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். இருப்பினும், அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று நீதிபதியின் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அவரது உடலை வரும் புதன்கிழமைக்குள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐஸ்வர்யா ஒரு பொறியியலாளராக டெக்சாஸில் வசித்து வந்தார். இந்தச் சம்பவத்தில் அவரது நண்பரும் படுகாயமடைந்துள்ளார். அவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், அவர் யார் என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்த ஐஸ்வர்யா, அமெரிக்காவில் முதுகலை படித்து அங்கேயே இரண்டு வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications