அமெரிக்காவிலும் “கோ பேக் மோடி".. பைடனுக்கு டென்சன்! கையெழுத்து இயக்கமே நடக்குதாம் - என்ன பிரச்சனை?
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திரும்பப்பெற வலியுறுத்தி அந்நாட்டில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்தியாவில் நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்த அமைப்பு தொடர்ந்து கண்டித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைப்பு இணையத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக இணையதள முகவரி மற்றும் கியூ ஆர் கோடை வெளியிட்டு இருக்கும் அந்த அமைப்பு அனைவரும், இதில் கையெழுத்திடுமாறு கோரி இருக்கிறது. மோடி அமெரிக்கா வருவதற்கு எதிராக தொடங்கப்பட்டு உள்ள லிங்கில் ஏராளமானோர் கையெழுத்திட்டு வருகிறார்கள்.
அந்த இணையதளத்தில் இடம்பெற்று உள்ள மனுவில், "ஜூன் 22 ஆம் தேதி வெள்ளை மாளிகைக்கு வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திரும்பப்பெற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவில் ஜனநாயக கொள்கைகள் மீறப்படுகின்றன.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான மனித உரிமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நாசிசத்தால் ஈர்க்கப்பட்டு உருவான இந்துத்துவ கொள்கையானது மதசார்பற்ற இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்ற சொல்கிறது. அமெரிக்க அரசின் விருந்தினராக நரேந்திர மோடியை அழைப்பது, இந்தியாவில் நடைபெற்று வரும் அடிப்பை ஜனநாயக உரிமை மீறல்கள் மற்றும் மோடி அரசின் ஜனநாயக விரோத போக்கை ஆதரிப்பதாக அர்த்தமாகிவிடும்.
மோடி அரசின் கீழ் அரசியல் எதிரிகள் மற்றும் விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. நீதித்துறையை கட்டுப்படுத்துவதுடன், முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களை கொல்லும் இந்துத்துவ கும்பல்களுக்கு ஊக்கம் தருகிறது.
இந்தியாவில் உள்ள 25 கோடி இஸ்லாமியர்களை கொலை செய்வோம் என்று மீண்டும் மீண்டும் பேசி வரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் செயல்படும் இந்துத்துவ அமைப்பினர் கட்டுப்படுத்த மோடி தவறிவிட்டார். அமெரிக்காவை சேர்ந்த இனப்படுகொலைகளை கண்காணிக்கும் Genocide Watch என்ற நிறுவனம், இன அழிப்புக்கான 10 கட்டங்களில் இந்திய முஸ்லிம்கள் 8 வது நிலையில் உள்ளதாக எச்சரித்துள்ளது.
எனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, வெள்ளை மாளிகைக்கு வர மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்பப்பெற வேண்டும். அதேபோல் இந்தியாவின் ஜனநாயகத்தை சீர்குலைத்து வரும் அவரது முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications