ஒரே நாளில் ’அந்தர் பல்டி’.. கனடா பொருட்கள் மீதான வரியை நிறுத்தி வைத்த டிரம்ப்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: மெக்சிகோ பொருட்கள் மீதான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்த சில மணி நேரங்களில், கனடா மீது விதிக்கப்பட்ட 25 சதவிகித இறக்குமதி வரியையும் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம்? என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கப் போவதாக அண்மையில் அறிவித்தார். சீனா மீதான இறக்குமதிக்கு 10 சதவிகிதமும், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதான இறக்குமதிக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்தார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்றவும், சட்ட விரோத கடத்தல்களை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக டிரம்ப் கூறினார். அமெரிக்கர்களை பாதுகாக்க வேண்டும், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, ஜனாதிபதியாக எனது கடமை. எனது பிரசாரத்தின்போது அமெரிக்காவுக்குள் சட்டவிரோத குடியேற்றத்தையும், போதைப்பொருள் கடத்தலையும் தடுப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தேன். அதற்காகவே அமெரிக்கர்கள் என்னை அதிபராக தேர்வு செய்துள்ளனர்.
எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எனது கடமை. அதன் ஒரு பகுதியாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியையும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியையும் விதித்துள்ளேன். நமது குடிமக்களை கொல்லும் கொடிய போதைப் பொருட்களின் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் மூலம் இந்த வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ளேன்" என்று கூறினார்.
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை வர்த்தக விதிகளை மீறுவதாக இருப்பதாக சீனா எச்சரித்தது. அதேவேளையில், கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் உடனடியாக எதிர்வினையாற்றின. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனடா மற்றும் மெக்சிகோ உடனடியாக எதிர்வினையாற்றின. அதன்படி 155 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
அதேபோல அமெரிக்காவின் இந்த விரோத நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படுவதாக மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் அறிவித்தார். 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இந்த நிலையில் தான் கனடா பொருட்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை ஒரு மாதம் அமெரிக்கா நிறுத்திவைத்து இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இது தொடர்பாக ஜஸ்டின் டிரூடோ தனது எக்ஸ் தளத்தில் கூறும் போது, டொனால்டு டிரம்புடன் தற்போதுதான் பேசினேன். எல்லை கண்காணிப்பு, பாதுகாப்பு தொடர்பாக பேசினோம். அறிவிக்கப்பட்ட வரி 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
ட்ரூடோ அறிவித்த உடனேயே, டிரம்பும் இதை உறுதி செய்தார். இது தொடர்பாக டிரம்ப் கூறும் போது, "தற்போது எற்பட்டுள்ள முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட வரி அறிவிப்பு ஒருமாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படும். கனடாவுடன் இறுதி பொருளாதார ஒப்பந்தம் கட்டமைக்கப்படுமா இல்லையா என்பதை இந்த கால கட்டத்தில் பார்க்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications