ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா.. மனம் மாறினாரா டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன் டிசி: ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியாவுக்கு செக் வைக்கும் விதமாக, நம் நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி நிர்ணயித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என மத்திய அரசும், தொழில் நிறுவனங்களும் கவலை தெரிவிக்கின்றன. இதனால் ரஷ்யா நாட்டின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் இதை நல்ல முடிவு என்று வரவேற்றிருந்தாலும் பிடி கொடுக்காமல் பேசியிருப்பது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதுமே கடந்த சில வருடங்களாக போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு போரும் உலகளவில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில் ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நிலவி வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டது. இதில் பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தன.

டிரம்பின் நடவடிக்கைகள்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுத்தனர். இது ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து பொருளாதாரத்தை சீரமைக்க கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய தொடங்கியது. மற்ற நாடுகளை ஈர்ப்பதற்காக தள்ளுபடி விலையில் எண்ணெய் கொடுத்தனர்.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கின. ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்பவில்லை. ஏற்கனவே அமெரிக்க அதிபரானதில் இருந்து டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் அந்த நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
வரி உயர்வு
அதன் தொடர்ச்சியாக இந்தியா மீதான வரியை உயர்த்தினார். ரஷ்யாவிடம், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நேரடியாக விமர்சித்த டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். இது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பு இந்தியாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக இங்குள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இதை எப்படி சமாளிப்பது என்று மத்திய அரசும் ஏராளமான ஆலோசனையில் ஈடுபட்டது. அதன்படி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பல பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஒருமித்தமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு நோ
இதன் மூலம் டிரம்பின் கோபம் குறைந்து வரி விதிப்பை திருப்பிப் பெற்று கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், "ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என்று இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
அது உண்மையா.. பொய்யா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என் காதுக்கு வந்த தகவலின்படி இந்தியா, இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க போவதில்லை என்று அறிகிறேன். இது ஆக்கபூர்வமான நடவடிக்கை. போக போக என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்." என்று கூறியுள்ளார். அதிகாரபூர்வ தகவல் வராத காரணத்தால் டிரம்ப் பிடி கொடுத்து பேசவில்லை என கூறப்படுகிறது.
அதிகாரபூர்வ அறிவிப்பா
தற்போதுவரை இதுகுறித்து மத்திய அரசு அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம், "இந்தியாவின் எரிசக்தி கொள்கைகள் நாட்டின் நலன் மற்றும் சந்தை நிலவரத்தை பொறுத்து எடுக்கப்படுகின்றன.
எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியை நிறுத்தியது தொடர்பான எந்த அறிவிப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசின் எரிசக்தி ஆதார தேவை குறித்து நீங்கள் நன்கு அறிவீர்கள். சந்தை நிலவரம், உலக சூழல் பொறுத்தே கொள்முதல் செய்யப்படும்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications