டிரம்ப் vs கமலா ஹாரிஸ்.. அமெரிக்கா அதிபர் தேர்தல் விவாதத்தில் வென்றது யார்.. மொத்தமா மாறிடுச்சே
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு நவ. மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே இரு தலைவர்களும் இடையேயான விவாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த விவாதத்தில் யார் வெற்றியாளர் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவருக்கும் இடையேயான முதல் விவாதத்தை ஏபிசி செய்தி நிறுவனம் நடத்தி முடித்துள்ளது.

இதில் சட்ட விரோத குடியேற்றம், கருக்கலைப்பு, அமெரிக்கப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்று பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தரப்பும் காரசாரமாக விவாதித்தனர்.
இந்த விவாதம் நடந்த முடிந்தவுடன் யார் இதில் வெற்றியாளர் என்ற அடுத்த விவாதம் மக்களிடையே தொடங்கிவிட்டது. ஏபிசி விவாதத்தின் ரூல்ஸின்படி அதிபர் தேர்தல் விவாதத்தில் யார் வெற்றியாளர் என்பதை அறிவிக்க மாட்டார்கள். மக்களே அதை முடிவு செய்து கொள்ளலாம். இருப்பினும், இந்த விவாதத்தில் வெற்றி பெற்றது யார் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் பலரும் விவாதித்து வருகிறார்கள்.
மொத்தம் 90 நிமிடங்கள் இந்த விவாதம் திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும் திட்டமிடப்பட்ட நேரத்தைக் காட்டிலும் விவாதம் சுமார் 30 நிமிடங்கள் கூடுதலாக நடந்தது. பல்வேறு தலைப்புகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் இரு தரப்பும் பேசியதால் விவாதம் திட்டமிடப்பட்ட நேரத்தைத் தாண்டி தொடர்ந்து நடந்தது.

விவாதம் முடிந்த பிறகு பல்வேறு நிறுவனங்களும் இதில் யார் வெற்றியாளர் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்தன. அதன்படி அமெரிக்க அரசியல் பகுப்பாய்வு நிறுவனமான பாலிமார்க்கெட், இந்த விவாதம் கமலா ஹாரிஸுக்கு சாதகமான இருந்ததாகத் தெரிவித்துள்ளது. டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸ் இந்த விவாதத்தில் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறியது.
சிபிஎஸ் நியூஸ் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களும் கூட கமலா ஹாரிஸ் தான் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. மேலும், விவாதத்திற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் சிஎன்பிசி செய்தி நிறுவனம் கமலா ஹாரிஸ் 54% ஆதரவும் டொனால்ட் டிரம்பிற்கு 46% ஆதரவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 53% ஆதரவும் டிரம்பிற்கு 46% ஆதரவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஏபிசி செய்தி நிறுவனத்தின் சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 49% ஆதரவும் டிரம்ப்பிற்கு 48% ஆதரவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது கிட்டதட்ட அனைத்து சர்வேக்களும் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என்று கூறியுள்ளன.
இது தொடர்பாக அந்நாட்டின் அரசியல் வல்லுநர் கோல்ட்பர்க் கூறுகையில், "இந்த விவாதத்தின் வெற்றியாளர் கமலா ஹாரிஸ் என்பதைச் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். அவரது பேச்சுகளில் பொய்கள் மற்றும் தவறான தகவல்கள் சில இருந்த போதிலும், அவர் டிரம்பை போல நிதானத்தை இழந்து கோபப்படவில்லை. தேர்தலில் இதுபோல கடும் போட்டி நிலவும் போது கோபப்படும் தலைவரை மக்கள் விரும்புவதில்லை. இந்த விவாதம் டிரம்பிற்கு பின்னடைவு தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications